சென்னையில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள்சந்திப்பு மேற்கொண்டார்.
அப்பொழுது பேசிய அவர்,''தேவையற்ற பதற்றம் ஒன்று நேற்றிலிருந்து நிலவிக் கொண்டிருக்கிறது. அது குறித்து விளக்கம் அளிப்பதற்காக இந்த செய்தியாளர் சந்திப்பு. இப்பொழுது விடப்பட்டிருக்கிற டெண்டர் என்பது தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான டெண்டர் என்ற செய்தி பரவி, அதுகுறித்து தான் தொழிற்சங்கங்கள் இந்த செய்தியை விமர்சித்து வருகிறார்கள். ஆனால், விடப்பட்டிருக்கின்ற டெண்டர் என்பது உலக வங்கி வழங்கி இருக்கக்கூடிய கருத்துரையின் அடிப்படையில் அதுகுறித்து ஆராய்வதற்கும், சாதக பாதகங்களை ஆராய்வதற்கும் ஒரு கன்சல்டன்ட்டைநியமிப்பதற்கான டெண்டர் தான்.
இதில் அதிமுகவின்தொழிற்சங்கமும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருப்பது தான் கேலிக்கூத்தான செய்தியாக இருக்கிறது. காரணம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இதற்கான ஜீ.ஓ-வை வெளியிட்டவர்கள் அதிமுக ஆட்சியாளர்கள் தான். இந்த ஜி.ஓ-வில் உலக வங்கி வழங்கியிருக்கிற கருத்துரை அடிப்படையில் சென்னையினுடைய இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் போர்டு அமைப்பின் மூலம் உலக வங்கி வழங்கி இருக்கக்கூடிய பல்வேறு கருத்துரைகளை தொகுத்து இந்த ஜி.ஓ வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த டெண்டர் ஆலோசனை வழங்குவதற்கான ஒரு கன்சல்டன்ட்டைநியமிப்பதற்கான டெண்டர். அதன் பிறகு சென்னையிலே அரசு வழித்தடத்தில் தனியார் பேருந்துகள் இயக்குவது குறித்த சாதக பாதகங்களை ஆய்வு செய்து அவர்கள் அறிக்கையளிப்பார்கள். அந்த அறிக்கையின் மீது அரசு முடிவு எடுத்து அதன்பிறகு இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், ஏதோ நாளையே தனியார் பேருந்துகள்இயக்கப் போகிறார்கள் என்பது போல் சொல்கிறார்கள்.
சென்னை மாநகரம், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் எல்லாம் முழுவதுமாக அரசு போக்குவரத்து நிறுவனத்தின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயங்குகின்றன. உலக வங்கி வழங்கியிருக்கக்கூடிய இந்த கருத்துரை என்பது அரசு போக்குவரத்து கழகம் தனியார் நிறுவனங்கள் இல்லாமல் மூன்றாவதாக அரசினுடைய வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்குவது என்பதுதான். எனவே பேருந்து போக்குவரத்து தனியார் மயமாவது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. ஆய்வு செய்யப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கும்போது தான் அடுத்தகட்ட செய்திகளை விவாதிக்கும் சூழ்நிலை இருக்கும்'' என்றார்.