திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் பிரதட்சணம் (வலம் வர) ஏற்பாடு செய்யக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வர மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் குறித்து நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் இரு வாரங்களுக்கு முன் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கோவிலுக்கு வரும் பக்தர்களைப் பேருந்து நிலையத்தில் வைத்து தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி, 500 ரூபாய் வரை இடைத்தரகர்களால் வசூலிக்கப்படுவதாக மனுதாரர் குற்றம் சாட்டினார். இதைக்கேட்ட நீதிபதிகள் கடவுளுக்கும், பக்தர்களுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை எனவும் இதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
ஆண்டவன் முன்பு அனைவரும் சமம் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக மனுவாகத்தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்தி விசாரணையை 12 வாரங்களுக்குத்தள்ளி வைத்தனர். இதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வி.ஐ.பி. தரிசனத்தை முறைப்படுத்துவது குறித்து அந்த அறிக்கையில் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.