Skip to main content

“உடல் தீண்டல் எதுவும் இல்லை; இது பாலியல் வழக்கல்ல!” -நிர்மலாதேவியை வைத்து விளையாடுவதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் விசாரணை ஒன்றுக்கு ஆஜராகாததால் பேராசிரியர் நிர்மலாதேவியின் ஜாமின் மனு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து,   அவர்  கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ளார்.

இந்நிலையில்,  நிர்மலாதேவிக்கு  ஜாமின் கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் 5-ஆம் தேதி  மனு தாக்கல் செய்தார்.  மனுவை விசாரித்த மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பரிமளா, வழக்கு விசாரணையின்போது நிர்மலாதேவி ஒழுங்காக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன்  ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.  

 

There is no physical harm- Lawyer of Nirmaladevi  alleges

 

அதன்பிறகு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

“நிர்மலாதேவி வழக்கில் அவருடைய ஜாமின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசுத்தரப்பில் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார்கள்.  ‘அவர் தலைமறைவாகி விடுவார். அவர் ஒரு மனநோயாளி. அவரை வெளியில் விடக்கூடாது’ என்று கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது நிர்மலாதேவி தரப்பில் நான்  ‘அவர் நீதிமன்றத்துக்கு ஒழுங்காக வந்து கொண்டிருந்தார். ஒருநாள் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரமுடியவில்லை என்று வழக்கறிஞர் மூலமாக இங்கே 317 பெட்டிசன் ஃபைல் பண்ணினார். அரசுத்தரப்பின் நெருக்கடி காரணமாக மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் அவர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆவதற்காக வந்துகொண்டிருந்தார். அப்போது சிபிசிஐடி போலீசார் வலுக்கட்டாயமாக அவரை இழுத்து கைதுசெய்து மீண்டும் சிறையில் அடைத்தார்கள். அவருக்கு பிணை வழங்க வேண்டுமென்று வாதாடினோம். அவருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கிறது.

 

lawyer


இந்த வழக்கை இன் – கேமரா – ப்ரசீடிங்ஸ்.. அதாவது, பூட்டிய அறையில் வைத்து விசாரணை நடத்த வேண்டுமென்ற வாதத்தை அரசுத்தரப்பு மீண்டும் மீண்டும் இன்று வலியுறுத்துகிறது. அதற்கு நிர்மலாதேவி தரப்பில் நான்,  ‘இந்த வழக்கு பூதாகரமாக்கப்பட்ட வழக்கு. இது பாலியல் வன்கொடுமை வழக்கல்ல. நோ பாடி டச்சஸ். பாடிகூட டச் ஆகல. பாலியல் வழக்கு கிடையாது. இது பாலியல் வழக்காக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பாலியல் வழக்கைத்தான்,  இன் – கேமரா – ப்ரசீடிங்ஸாக..  பாலியல் சம்பந்தப்பட்ட விசாரணை நடத்துவார்கள். இந்த வழக்கு அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வழக்கு. ஆகவே, இன் – கேமரா – ப்ரசீடிங்ஸ் தேவையில்லை என்று வாதாடினேன். அதுபோல், பத்திரிகையாளர்கள் இந்த வழக்கு சம்பந்தமாக, வழக்கின் தீர்ப்பு வரும்வரை எதுவும் செய்தி வெளியிடக்கூடாது என்று அரசுத்தரப்பில் இன்று வாதிட்டனர்.  நிர்மலாதேவி தரப்பில் நான்  ‘பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் ஆரம்பமே ஒரு ஆடியோதான். அந்த ஆடியோ வீடியோவாக மீடியாவில் வெளியானதால், இது மீடியா ஆடியோ வழக்கு.  ஆகவே, இந்த வழக்கு குறித்து  தற்சமயம் ஊடகங்களில் செய்தி வெளிவருவதை நிறுத்துவதென்பது, பத்திரிகை சுதந்திரத்தின் மீது இந்த அரசு தொடர்ந்து கை வைக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.’ என்றேன்.  இதற்கு அரசுத்தரப்பில் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார்கள்.  

நிர்மலாதேவி தரப்பில் நான்,  ‘நிச்சயமாக பத்திரிகை சுதந்திரத்திற்கு முழு உரிமை அளிக்க வேண்டும். இதனை மீறுவதென்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பத்திரிககை சுதந்திரத்தை,கருத்து சுதந்திரத்தைப் பறிப்பது போன்றது. ஆகவே, இந்த வழக்கில் முழு முடிவு வெளிவரும் வரை பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று வாதிட்டிருக்கிறேன். இதற்கான முடிவையும் 13-ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார். 13-ஆம் தேதி சாட்சி விசாரணை நடைபெறுமென்றும், முதல் சாட்சி விசாரணைக்கு அழைக்கப்படுவாரென்றும், அன்றைக்கு அனைவரும் நீதிமன்றத்திற்கு வரவேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைக்கு நீதிமன்றத்திற்கு நிர்மலாதேவி அழைத்து வரப்படவில்லை. அவர் சிறைக்குச் சென்றதிலிருந்து இன்றுவரை அவரைப் பார்ப்பதற்கு யாரையும் சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கனவே முன்வைத்திருக்கிறேன். இன்றைக்கும் சொல்கிறேன். நேற்று வழக்கறிஞர்களை அனுப்பியிருந்தோம். வழக்கறிஞர் மனுவிலும் அவரைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. அவருடைய உறவினர்களும் அனுமதிக்கப்படவில்லை.  ஏனென்றால், சிறையில் அவரை வழக்கு சம்பந்தமாக மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனைச் சொல்வதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். அது மட்டுமல்ல, நேற்றும் சிறையில் அவர் தாக்கப்பட்டிருக்கிறார். அவர் வந்தால் அவருடைய காயம் தெரிந்துவிடும். வெளியில் சில விஷயங்களைக் கூறிவிடுவார் என்பதற்காக, அவரை இன்று அழைத்து வரவில்லை என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைக்கிறேன்.

இது தமிழக அரசும், அரசு இயந்திரமும், தமிழக அமைச்சர் ஒருவரும் முழுமையாகத் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி இந்த வழக்கிலே ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் வைக்கிறேன். நிர்மலாதேவி  மதுரை சிறையில்தான் இருக்கிறாரா? அல்லது, வெளியில் இருக்கிறாரா? அல்லது, அமைச்சருடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களா? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அந்த அம்மையாரை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்களா என்ற விபரம் எங்களுக்குத் தெரியவில்லை. இது மனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயம். அவர் ஜாமினில் வெளியில் வந்தபிறகுதான், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை - அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடிய அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம். மனநல மருத்துவரை அணுகி, நிர்மலாதேவியின்  மனநலம் சரியான பிறகு, அந்த சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றார்.

தமிழக அரசுக்கும், தமிழக அமைச்சருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை ஒவ்வொரு விசாரணையின் போதும்  வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அடுக்கிக்கொண்டே போகிறார். ஆனால் அரசுத் தரப்பு ஏனோ எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமலேயே  இருக்கிறது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம்'- மனம் திறந்த இராபர்ட் பயஸ் 

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
 'There are still three of us left' - open-minded Robert Pius

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சாந்தன் உடலநலக் குறைவு காரணமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தனது தாயாரை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த சாந்தன் உயிரிழந்தது அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறப்பு முகாமில் மருத்துவ வசதிகள் இல்லாததாலேயே அவர் உயிரிழந்தார் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் 'சிறப்பு முகாம் எனும் சித்திரவதை முகாமில் இருந்து ஓர் திறந்த மடல்' என்ற தலைப்பில் தற்பொழுது திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இராபர்ட் பயஸ் கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

அந்த கடிதத்தில்

'உலகத் தமிழர்களுக்கு....

வணக்கம். நான் இராபர்ட் பயஸ் பேசுகிறேன். உங்களை உங்களோடு உங்களில் ஒருவனாக சுதந்திர மனிதனாக இல்லாமல் எங்களில் ஒருவரான சாந்தனை இழந்து இதோ இந்த கம்பிகளுக்கு பின்னால் இருந்து இப்படி உங்களை சந்திக்க நேர்ந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. 32 வருட நீண்ட சிறைக் கொட்டடிக்கு பிறகு கடந்த 11-11- 2022 அன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்த ஆறுபேரில் நானும் ஒருவன். அந்த ஆறுபேரில் நான், ஜெயக்குமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய நால்வரையும் இலங்கைத் தமிழர் எனக் காரணம் கூறி இந்திய வெளியுறத்துறை நாட்டைவிட்டு வெளியே அனுப்பும் வரை சிறப்பு முகாமில் அடைத்து வைக்க உத்தரவிட்டது.

 'There are still three of us left' - open-minded Robert Pius

தொலைந்து போன வாழ்க்கையை எதிர்நோக்கி 32 வருட நீண்ட காத்திருப்பு முற்றுபெறும் தருவாயில் கூட விடுதலையை ருசிக்க முடியாமல், சிறிது நேரம் கூட விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் புழல் சிறையிலிருந்து நானும் ஜெயக்குமாரும் வேலூர் சிறையிலிருந்து சாந்தனும் முருகனும் திருச்சி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டோம். இதோ முடியப்போகுது 32 ஆண்டுக்கால சிறைக் காத்திருப்பு என்று எண்ணிய எங்களுக்கு அப்பொழுது விளங்கவில்லை நாங்கள் சிறை மாற்றப்படுகிறோம் என்று. ஆம், அன்று நடந்தேறியது அப்பட்டமான சிறை மாறுதல் தான் என்பதை எங்களுக்கு காலம் தான் விளக்கியது. இது சிறையல்ல சிறப்பு முகாம் தானே என்று எண்ணிய எங்களுக்கு இது சிறையல்ல சிறையை விட கொடுஞ்சிறை என்பதும் எங்களுக்கு போகப்போகத் தான் விளங்கியது.

நாட்டைவிட்டு அனுப்பும்வரை எங்களை சிறப்பு முகாமில் வைக்கிறோம் என்றவர்கள் இன்றைய தேதிவரை நாட்டைவிட்டு அனுப்புவதற்கு எடுத்த முன்னெடுப்புகள் என்னவென்று கேட்டால் மிகப்பெரிய கேள்விக்குறியும் ஆச்சரியக்குறியும் தான் மிஞ்சும். "சிறப்பு முகாமா..? அது ஜெயில் மாதிரிலாம் இல்லைங்க சார். எல்லா வசதிகளும் செய்து கொடுப்போம்" என்று பேசி சமாளிக்கும் அரசும் நிர்வாகமும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி ஒரு வார காலமாக மருந்து மாத்திரை கிடைக்காமல் ஒருவர் இறந்து போனார். இப்பொழுது சாந்தன் கல்லீரல் முழுவதும் செயலிழந்து, எழுந்து நிற்கக் கூட முடியாமல் மிக மோசமடைந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் ஏதும் பலனளிக்காத நிலையில் இறந்து போயிருக்கிறார். இந்த மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது..? யாரை நாங்கள் நொந்துகொள்வது..?

அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுத்து, உடல்நலன் குன்றி 'விடுதலை ஆகிவிடுவோம். விடுதலை ஆகிவிடுவோம்.' என்று கனவு கண்டு விடுதலை ஆகிவிட்டோம் என்று பூரிப்பு கிடைத்த தருவாயில் மீண்டும் ஏமாற்றப்பட்டு சிறைமாற்றப்பட்டு இதனால் மனநலனும் பாதிக்கப்பட்டு இறந்து போன சாந்தனுக்கு சிறை வாழ்வு முடிந்தது. இன்னும் மீதம் மூன்று பேர் இருக்கிறோம். நாங்கள் மீண்டும் காத்திருக்க தொடங்குகிறோம் இந்த சிறப்பு முகாமில்.

சிறையில் கூட சிறை நிர்வாகத்திற்கு சிறை விதிகள் கையேடு இருக்கிறது. அதன்படி கைதிகளுக்கு இருக்கக்கூடிய மற்றும் இல்லாத உரிமைகள் கடமைகள் வரையறுக்கப்பட்டு இருக்கும். ஆனால் சிறப்பு முகாமோ சிறையை விட கொடுமையானது, இங்கு எந்த சட்டத்திட்டங்களோ வரையறைகளோ கிடையாது. அரசும், மாவட்ட ஆட்சியரும், முகாம் நிர்வாகமும் என்ன நினைக்கிறதோ அவையெல்லாம் விதிமுறைகளாகவும் சட்டத்திட்டங்களாகவும் ஆக்குகின்றன. மருத்துவம் கிடையாது என்று இவர்கள் முடிவெடுத்தால் முகாம்வாசிகளுக்கு மருத்துவம் கிடையாது. தனிமைச் சிறை என்று இவர்கள் முடிவெடுத்தால் தனிமைச் சிறை, யாரும் மனு பார்க்கக்கூடாது என்று இவர்கள் முடிவெடுத்தால் யாரும் மனுப்பார்க்க முடியாது. இப்படியான நிர்வாகம் தான் நாட்டைவிட்டு வெளியில் அனுப்புவதற்காக என்று காரணம் கூறி சிறப்பு முகாமில் அடைக்கப்படுபவர்கள் அதற்கான எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படாமல் வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இன்னொரு சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். நாங்கள் சிறு சிறு அடிப்படைத் தேவைகளையும் மற்றும் அடிப்படை உரிமைகளையும் கூட போராடி, உயிரைக் கொடுத்து பெறவேண்டிய சூழலே இருக்கிறது.

எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியான 32 வருடங்கள் ராஜீவ்காந்தி பெயரைச் சொல்லியே சிறையில் கடத்தப்பட்டது. இறுதியில் உச்சநீதிமன்றத்தின் விடுதலை ஆணைக்கு பின்னும் எங்களை எங்கள் குடும்பங்களோடு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்காமல் காலங்கடத்தி காலங்கடத்தி இறுதியில் சாந்தனை இழந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மீதமுள்ள நாங்களும் எங்களுக்கான ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் பெறுவதற்கு இதுவரை எண்ணற்ற மனுக்களையும், வழக்குகளையும், உண்ணாநிலை போராட்டங்களையும் மேற்கொண்டே பெற்று வருகின்றோம். அதில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் காற்றிலே போகும். மீதி, கேட்கப்படாமலே மக்கிப் போகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், இந்த மாத தொடக்கத்தில் இலங்கை துணைத் தூதரகம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நானும் முருகனும் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்ட பொழுது ஒரு வாரத்தில் அழைத்துச் செல்கிறோம் என்று எங்களுக்கு வாக்குறுதி கொடுக்கப்பட்டு 20 நாட்களை கடந்தும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இவ்வாறில்லாமல் உரிய அரசு நெறிமுறைகள், அவர்கள் கடமையை முறையே செய்திருந்தால் இன்று சாந்தன் உயிருடன் அவருடைய தாயாருடனும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக இன்னும் ஓரிரு வருடங்களாவது இருந்திருப்பார்.

33 வருடங்களாக தனது மகனை பிரிந்து கண்பார்வை குன்றி வயது முதிர்ச்சியடைந்து கடைசியாக ஒருமுறையாவது தனது மகனை பார்த்துவிடவேண்டும் என்று ஏங்கிய ஒரு தாயின் கையில் அந்த மகனின் உயிரற்ற உடலைத்தான் கொண்டுபோய் சேர்க்கப் போகிறோம். கடைசியாக தனது கையால் தன்மகனுக்கு ஒருபிடி உணவு கொடுக்க மாட்டோமா என்று ஏங்கிய அந்த தாய் அந்தமகனுக்கு கடைசியாகக் வாய்க்கரிசி கொடுக்கத்தான் வாய்க்கப்பட்டிருக்கிறார். இதோ இன்று தன் மகன் வந்துவிடுவான், என்று எதிர்பார்த்து காத்திருந்த அந்தத் தாயிடம் 'உன் மகன் வரவில்லை. அவனின் உயிரற்ற உடல்தான் வருகிறது' என்கிற செய்தியை அந்தத் தாயிடம் யாரால் சொல்லியிருக்க முடியும். அத்தகைய கல்நெஞ்சம் படைத்த மனிதர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்களா என்ன.!? 33 வருடங்கள் கழித்து தன் மகனின் வருகைக்காக மகிழ்ச்சியாக காத்திருந்திருக்கும் அந்த வீட்டில் இந்த செய்தி ஏற்படுத்திய மயான அமைதியின் பேரிரைச்சலை தாங்கிக் கொள்ளும் கனத்த இதயம் கொண்ட மனிதர்களும் இவ்வுலகில் இருக்கிறார்களா என்ன?!

இதோ கடந்த மாதம் என்னுடன் நடந்து மருத்துவ பரிசோதனைக்கு வந்த சாந்தன் இன்று எங்களோடு இல்லை. ஒரு மாதத்தில், எங்களோடு உறவாடி, பேசி உலாவிய சாந்தன் இன்று உயிரோடு இல்லை.

மீதமிருக்கிற, ஜெயக்குமாரும் முருகனும் 33 வருடங்களாக தங்கள் குடும்பங்களை பிரிந்து வாடும் நிலையில் நானோ, மனைவி ஒரு நாட்டில் மகன் ஒரு நாட்டில் தாய், சகோதர சகோதரிகள் வேறு நாட்டில் என சிதறுண்டுக் சிதைந்துக் கிடக்கும் குடும்பத்தை ஒன்றுசேர்த்து ஒரு நாளேனும் வாழ்ந்து விட மாட்டோமா?! பச்சிளம் பாலகனாக பார்த்த எனது மகன் எவ்வளவு உயரம் இருப்பான்? அவன் என்னைவிட உயரமா? அல்ல உயரம் குறைவா? அவனுக்கு திருமணம் ஆகி எனக்கு பேரன் பிறந்திருக்கிறானாம்.! நான் எந்த வயதில் என் மகனை பிரிந்தேனோ அந்த வயதில் எனக்கு இப்பொழுது பேரன் இருக்கிறான். அவனதுப் பஞ்சு பாதங்களை அள்ளியெடுத்து ஒருமுறையேனும் என் முத்தங்களை காணிக்கையாக்கிவிட மாட்டேனா..?!

அன்பார்ந்த உலகத் தமிழ் சமூகமே இன்னும் நாங்கள் மூன்று பேர் மிச்சம் இருக்கிறோம். எங்கள் நிலைமை? நீண்டகால சிறைவாசமும், குடும்பங்களை பிரிந்த துயரமும் எங்களை முழுமையான நோயாளிகளாக்கியுள்ளது. சாந்தனைப் போலல்லாமல் எங்களையாவது எங்கள் கடைசி காலத்தில் மிஞ்சியிருக்கிற கொஞ்ச காலம் எங்கள் தாயார், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்து விட்டுப் போக இந்த அரசு இனியாவது நடவடிக்கை எடுக்குமா..?

எங்கள் குடும்பங்களை பிரிந்து வாழ்க்கையை இழந்து வாடும் இப்பெருந்துன்பங்கள் முடிவுக்கு வருமா..?' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.