Skip to main content

''இதைக் கசப்பு மருந்தாகக் கருதி ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை!'' - ராமதாஸ்!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

"There is no other way but to consider this as a bitter pill" - Ramadas

 

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தியபோதும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று (24/04/2021) வெளியிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வர இருக்கிறது.

 

அதன்படி, திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கூட்ட அரங்குகள், பார்கள் இயங்க அனுமதி இல்லை. பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. சென்னை மாநகராட்சி உள்பட மாநகராட்சிகள், நகராட்சிகளில் சலூன், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை. புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம். ஓட்டல், டீ கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தால் இ-பதிவு காட்டவேண்டும். வழிபாட்டுத் தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை. தனியார், அரசுப் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை. இறுதி ஊர்வலங்களில் 25 பேரும், திருமண நிகழ்ச்சியில் 50 பேரும் மட்டும் கலந்துகொள்ள அனுமதி. கோவில் குடமுழுக்கில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. கோயில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 50 சதவிகிதம் ஐ.டி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்.

 

இந்தப் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 26 அதிகாலை 4 மணியிலிருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கரோனா கட்டுப்பாடுகள் குறித்து பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் குறைக்கும் நோக்கத்துடன் பல்வேறு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள் மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் என்றாலும் கூட, இவற்றை கசப்பு மருந்தாகக் கருதி ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை.

 

"There is no other way but to consider this as a bitter pill" - Ramadas

 

திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள் ஆகியவை முழுமையாக மூடப்பட வேண்டும்; சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அனைத்து முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் ஆகியவை மூடப்படும்; கூட்ட அரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவை மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த புதியக் கட்டுப்பாடுகள் வரும் 26ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தாலும், செயலளவில் இன்று இரவு முதலே அனைத்து புதிய கட்டுப்பாடுகளும் நடைமுறையாகும்.   கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட தொழில்கள் மற்றும் தொழில் இடங்களையும், அவற்றின் இயல்புகளையும் வைத்துப் பார்க்கும் போது நோய்ப்பரவலைத் தடுக்க அவற்றை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.

 

கரோனா இரண்டாவது அலை எவ்வளவு தீவிரமானதாக உள்ளது என்பதை வட மாநிலங்கள் மற்றும் கேரளம், கர்நாடகத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் உணர்த்துகின்றன. தமிழ்நாட்டில் கூட கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பரவத் தொடங்கிய கரோனா சுமார் 6,900 என்ற உச்சத்தை அடைய 6 மாதங்களுக்கு மேல் ஆனது. ஆனால், இரண்டாவது அலையில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்து விட்டது. தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் உள்ளன; சாதாரண பாதிப்புகளுக்குத் தேவையான மருந்துகள், கடுமையான பாதிப்புகளுக்குத் தேவையான ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர்கள், நோய்த்தடுப்புக்கான தடுப்பூசிகள் போன்றவை தேவைக்கு ஏற்ற அளவில் உள்ளன. இது பெருந்துயரத்திலும் நிம்மதியளிக்கும் விஷயம் ஆகும்.

 

சென்னையில் இப்போது தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் கீழ் இருக்கும் நிலையில், அடுத்த மாதத்தில் இந்த எண்ணிக்கை 19 ஆயிரத்தைத் தாண்டும் என்றும், தமிழ்நாட்டில் தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலோ, அதை விட மோசமான நிலை உருவானாலோ, வட இந்திய மாநிலங்களில் நிலவுவது போன்ற மோசமான சூழல் தமிழ்நாட்டிலும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

 

அப்படி ஒரு மோசமான நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால், அரசு இப்போது அறிவித்துள்ளது போன்ற சற்றே எளிதான கட்டுப்பாடுகளை பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. மிகப்பெரிய ஆபத்தை தடுக்க இந்த கசப்பு மருந்தை நாம் உட்கொண்டு தான் ஆக வேண்டும். கடந்த ஆண்டில் நோய்த்தொற்று மிகவும் குறைவாக இருந்த நிலையிலும், கடுமையான கட்டுப்பாடுகளுடன் முழுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், இம்முறை அத்தகைய ஊரடங்கின் சமூக, பொருளாதார விளைவுகளை சமாளிக்கும் நிலையில் தமிழ்நாடு இல்லை. ஆனாலும், நம்மைக் காக்க நமக்கு நாமே  சாத்தியமான கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும். அது தான் நமது உயிரைக் காக்கும்.

 

பொதுமக்கள் அனைவரும் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியில் வரக் கூடாது. வீடுகளை விட்டு வெளியில் வரும் போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்; வெளியிடங்களில் 2 மீட்டருக்கும் கூடுதலாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; வெளியில் சென்று வீடுகளுக்குத் திரும்பும் போது கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்; மருத்துவர்களின் அறிவுரைப்படி கபசுரக்குடிநீர் அருந்த வேண்டும். இவற்றைக் கடைப்பிடித்தால் கண்டிப்பாக கரோனா நெருங்காமல் தடுக்க முடியும்.

 

நோய்த்தடுப்புக்காக குடிப்பகங்களை மூடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்துள்ள தமிழக அரசு, மாநிலம் முழுவதும் மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும். அது தான் பெருமளவில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தும். முடித்திருத்தகங்களை மூடுவது உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய நிதியுதவி வழங்க முன்வர வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.