திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சிவராசு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “திருச்சியில் 20.93 லட்சம் நபர்கள் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளத் தகுதியானவர்கள். இதில் மாவட்டத்தில் இதுவரை 7.50 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கி உள்ளோம். கோவிட் மூன்றாவது அலைக்கு முன்னெச்சரிக்கையாகத் தயார் நிலையில் உள்ளோம். குழந்தைகளுக்கு என்று 100 படுக்கைகள் கொண்ட பிரிவு தயார்படுத்தியுள்ளோம். திருச்சி நகரில் உள்ள 20 வார்டுகளில் 103 கி.மீ குடிநீர் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு பஞ்சப்பூரில் 115 ஏக்கர் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை முன்மொழிந்துள்ளோம். சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனி முறைப்படி அதற்கான பணிகள் நடைபெறும்.
திருச்சியில் 50ல் இருந்து 70 என்கிற அளவில் கடந்த 2 வாரங்களாக கோவிட் பாசிட்டிவ் கேஸ் உள்ளது. திருச்சியில் 7.50 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசிகளைப் போட்டுள்ளனர். ஆனால், இரண்டாவது தவணை தடுப்பூசிகளை வெறும் 1.5 லட்சம் பேர் மட்டுமே போட்டு உள்ளனர். முதல் தவணை ஊசி செலுத்திக் கொண்டவர்களில் ஏறத்தாழ 72% பேர் இரண்டாவது தவணை ஊசியைச் செலுத்திக் கொள்ளவில்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மிக மிகக் குறைவாக உள்ளது. தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து காலியாக தான் உள்ளன. மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் முகக் கவசங்களை மக்கள் அணிவதை முற்றிலும் மறந்து வருகின்றனர்” என்றார்.