Skip to main content

டெல்லி உப்ஹார் தீ விபத்து போல மதுரையில் நிகழ்வதற்காக சாத்தியங்கள் இருக்கு: நீதிபதிகள் வேதனை

Published on 20/02/2018 | Edited on 20/02/2018
delhi

 

 

மதுரை சொக்கிகுளம் பகுதியில் கோகலே சாலையில் உள்ள விஷால் டி மால்-க்கு விதிகளை மீறி மதுபான பார் உரிமம் வழங்கியதை எதிர்த்து ஸ்டாலின் என்பவர் மதுரை கிளையில்  மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் "5 மாடி கட்டிடத்தில் தமிழக சுற்றுலா துறை அனுமதி பெறாமல் நட்சத்திர ஹோட்டலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதகவும், 4 வது தளத்தில் 5 திரையரங்குகள் அமைக்கப்ப ட்டுள்ளதாகவும், மேலும் போதுமான வாகன நிறுத்தும் இடமில்லாமல் கட்டபட்டுள்ளது என்றும், போதுமான வாகன நிறுத்தம் இல்லாததால் கோகலே சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அருகில் மகளிர் கல்லூரி இருக்கும் நிலையில், வாரத்தில் ஒருநாள் மாணவிகளுக்கும், பெண்களுக்கும் இலவச மதுபானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும்" மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.சசிதரன்,நீதிபதி  என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் உத்தரவின் படி,  மாவட்ட ஆட்சியர், தீயணைப்பு துறை அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், வணிக வளாகமாக கட்டப்பட்ட கட்டிடத்தை நட்சத்திர உணவுவிடுதியாக மாற்றியுள்ளனர் என்றும், 3 மாதங்களில் 35 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளதையும், சுற்றுலாத்துறை இயக்குநரின் அனுமதியையும் பெறவில்லை  என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 300 வாகனங்கள் அமைக்கப்பட வேண்டிய நிலையில், 95 வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு மட்டுமே வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இந்த  அறிக்கையை ஏற்றுக்கொண்டு வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்ட பார் உரிமத்தை ரத்துசெய்த நீதிபதிகள், வணிக வளாக தரப்பில் பார் உரிமம் கோரி புதிய விண்ணப்பம் கொடுக்கும் பட்சத்தில், மாவட்ட ஆட்சியர் மற்ற அதிகாரிகளுடன் ஆய்வு செய்யவும், விதிமுறைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டனர்.

 

பிப்ரவரி 2ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த தீவிபத்தை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவத்தை முன்னெச்சரிக்கையாக கருதி, மதுரை மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள கட்டிடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

 

காளான் போல பெருகிவரும், சட்டவிரோத கட்டிடங்கள் அதில் ஏற்படும் தீ விபத்துகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை, தீயணைப்புதுறை அதிகாரிகள் தீவிரமாக பார்க்காவிட்டால் டெல்லி உப்ஹார் தீ விபத்து போன்ற ஒரு சம்பவம் மதுரையில் நிகழ்வதற்காக சாத்தியங்கள் இருப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் வேதனை தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.