தென்காசியின் முதல் மாவட்ட கலெக்டராக பொறுப்பெற்ற அருண் சுந்தர் தயாளன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது, "தென்காசியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரே உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்திலும், இதன் பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முதல் தளம் கட்டப்பட்டு அங்கும் செயல்படும். மக்கள் குறை தீர்க்கும் நாள் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும். ஆட்சியர் அலுவலகம் செயல்பட சேமிப்புக் கிடங்கு கட்டிடம் தயார் செய்யப்படும். இந்த பணிகளுக்காக சுமார் 5.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment

thenkasi collector press meet

புதிய ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆயிரப்பேரியில் அரசு விதைப்பண்ணைக்குரிய இடத்தில் அமைய இருக்கிறது. தென்காசி நகரில் பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு அதிலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு அணுகு சாலை அமைக்கப்படும்.

கேரளாவில் இருந்து இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் கொண்டுவருவது குறித்து அதிக அளவில் புகார்கள் வந்துள்ளது. அது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தடுக்கப்படும்" என்றார் அவர். பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி கோட்டாட்சியர் பழனிக்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.