Skip to main content

தனியார் நிறுவன மேலாளரை அடித்துக் கொலை செய்து ரூபாய் 22 லட்சம் கொள்ளை!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
theni


தனியார் நிறுவன மேலாளரை அடித்துக்கொலை செய்து 22 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்று உள்ளனர்.

 

தேனி பங்களாமேடு பென்னி குவிக் நகரைச் சேர்ந்த அழகர்சாமியின் மகன் அருண்குமார். இவர் தேனி நகர் மதுரை சாலையில் சன்னாசி என்பவருக்கு சொந்தமான மோட்டார் விற்பனை நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று பகலில் இவர் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் பணம் எடுத்துவரச் சென்றார். அதன்படி தேனி பெத்தாச்சி விநாயகர் கோவில் அருகில் உள்ள ஒரு வங்கியில் 22 லட்சத்தை எடுத்தார். அருண்குமார் வழக்கமாக வங்கியில் பணத்தை எடுத்து விட்டு அதன் நிறுவனத்தில் வைப்பது அல்லது நிறுவனம் உரிமையாளரின் வீட்டில் பணத்தை கொடுப்பது வழக்கம். ஆனால் அவர் நேற்று வங்கியில் எடுத்த பணத்தை நிறுவன உரிமையாளர் வீட்டில் கொடுக்கவில்லை. நிறுவனத்திற்குச் சென்ற நிலையில் அங்கும் பணத்தைக் கொடுக்காமல் வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. 

 

இதையடுத்து நிறுவனத்தில் வேலை பார்க்கும் மற்றவர்கள் இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அருண்குமார் செல்போன் எண்ணில் சிக்னலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவருடைய செல்போன் எண் பெரியகுளம் சாலை வழியாக அண்ணாச்சி விளக்கு சென்று பின்னர் புதிய பஸ் நிலையம் ஒரு வழி புறவழிச் சாலையில் தனியார் உள் விளையாட்டு அரங்கு அருகில் மலைக்கு அடிவாரத்தில் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது.

 

இதனால் தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் அங்கு சென்றார். அப்போது மலைக்கு அடிவாரத்தில் அருண் குமார் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

அதன்பின் அருண்குமார் பிணம் அருகே ரத்தக்கரை படிந்த ஒரு கத்தியும் செல்போன் ஆகியவையும் கிடந்தது. அதோடு அவருடைய மோட்டார் சைக்கிள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சாவியும் மோட்டார் சைக்கிளிலேயே இருந்தது. அவருடைய பின்தலை மற்றும் முகத்தில் கத்தியால் தாக்கப்பட்டு பலத்த காயம் இருந்தது. பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தேனி போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து பிணத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அவர்கள் அருண் குமார் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

 

மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சாய்சரண் சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மோட்டார் சைக்கிள் சுத்தியல் ஆகியவற்றின் பதிவாகி இருந்த கைரேகைகளைச் சேகரித்தனர் சம்பவ இடத்தில் இருந்த காலி மதுபான பாட்டில்கள் பதிவாகி இருந்த கைரேகைகளைச் சேகரித்தனர். பின்னர் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட அருண்குமார் வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்ததை நோட்டமிட்ட மர்ம கும்பல் அதன் பிறகு அவரைப் பின்தொடர்ந்து சென்று கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

 

இது சம்பந்தமாக போலீசார் சிலரிடம் கேட்டபோது, கொலை செய்யப்பட்ட அருண்குமார் ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து விட்டார். பின்னர் இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். அவர் ஏன் இங்கு வந்தார் என்று தெரியவில்லை. அவருக்கு நன்கு அறிமுகமான நபர்கள் தான் அவரை இங்கு அழைத்து வந்து இருக்கக்கூடும். பணத்தைக் கொள்ளையடிக்க இச்சம்பவம் நடந்து இருக்கலாம். கொலையாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று கூறினார்கள். இச்சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

http://onelink.to/nknapp

 

கொலையாளிகளைப் பிடிக்க அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.