தேனி நியூட்ரினோ திட்டம் தொடர்பான வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குப் பிறகு சில முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் அதுகுறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் நியூட்ரினோ வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.