Skip to main content

தேனி மாவட்ட திமுகவுக்கு மட்டும் விதி விலக்கு! பொறுப்பு குழு தலைவர்கள் நியமனம்!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை மாவட்ட செயலாளர், மாவட்ட பொறுப்பாளர், நகர பொறுப்பாளர் நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், ஒன்றிய பொறுப்பாளர் போன்ற பதவிகளைத் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் சமீபகாலமாக  பொறுப்புக் குழு தலைவர் என்ற பதவியையும்  அறிவாலயம் அறிவித்து வருகிறது.

 

Theni dmk

 



தேனி மாவட்டத்திலும் பொறுப்புக் குழு தலைவர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பொறுப்புகுழு உறுப்பினர்களை  அறிவாலயம்  அதிரடியாக அறிவித்திருக்கிறது. தேனி மாவட்டத்தில் எட்டு ஒன்றியம், நான்கு நகரங்கள் இருக்கிறது. இந்த நிலையில் தான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தேனி ஒன்றிய செயலாளரான ரத்தினசபாபதி, சின்னமனூர் ஒன்றிய செயலாளரான முருகேசன், உத்தமபாளையம்  ஒன்றிய செயலாளரான  குமரன், பெரியகுளம் நகர செயலாளரான அபுதாகீர், கம்பம் நகர செயலாளரான சிங் செல்லப் பாண்டி ஆகியோர்களின் பதவிகளை திடீரென  அறிவாலயம் எடுத்து விட்டு அதற்கு பதிலாக தேனி ஒன்றிய பொறுப்பாளராக சக்கரவர்த்தி, சின்னமனூர் ஒன்றிய பொறுப்பாளராக அண்ணா துறை உத்தமபாளையம் ஒன்றிய பொறுப்பாளராக அணைபட்டி முருகேசன், பெரியகுளம் நகர பொறுப்பாளராக முரளி, கம்பம் நகர பொறுப்பாளராக நெப்போலியன் ஆகியோரை புதிய  பொறுப்பாளர்களாக அறிவாலயம் அறிவித்தது.

ஆனால் பதவி பறிக்கப்பட்ட மூன்று ஒன்றிய செயலாளர்களும் இரண்டு நகர செயலாளர்களும் நாங்கள் என்ன தவறு செய்தோம் எதற்காக எங்கள் பதவியை எடுத்தீர்கள் என்று தொடர்ந்து அறிவாலயத்தில் முறையிட்டதுடன்  மட்டுமல்லாமல் தலைவர் ஸ்டாலினையும் சந்தித்து எங்க மேல் எந்த தவறும் இல்லை வேண்டுமென்றே பதவிநீக்கம் செய்து விட்டனர் என்றும் முறையிட்டனர். அதன் அடிப்படையில்தான் கடந்த 19ம் தேதி முரசொலியில்  பொதுச் செயலாளர்  அன்பழகன் உத்திரவின்பேரில் மூன்று ஒன்றியம் இரண்டு நகரம் பொறுப்புக்களையும் கலைத்துவிட்டு புதிய பொறுப்புக்குழுவை அறிவித்தார். அதில் ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்ட ஐந்து பேரையும் அந்தந்த ஒன்றியம் மற்றும் நகர பகுதிக்கு பொறுப்புக் குழு தலைவராகவும் ஏற்கனவே அந்தப் பகுதியில் பொறுப்பாளராக இருந்தவர்களுக்கு பொறுப்பாளர்கள் பதவியையும் கொடுத்தனர்.

அதுபோல்  பொறுப்புக் குழு உறுப்பினர்களையும்  புதிதாக  அறிவாலயம் அறிவித்தது அதைக்கண்டு பொறுப்புக் குழு தலைவர்களும். பொறுப்பாளர்களும் பூரித்து போய்விட்டனர். அதோடு  மூன்று ஒன்றியங்கள் மற்றும் இரண்டு நகரங்களில் உள்ள  பொறுப்புக் குழு தலைவர்களும் பொறுப்பாளர்களும்  இணைந்து செயல்பட்டு கட்சியை வளர்க்க வேண்டும் என தலைவர் ஸ்டாலினும் அறிவுரை வழங்கி இருக்கிறார். அதன் அடிப்படையில் மாவட்டத்தில்  கட்சியை வளர்க்கும் ஆர்வத்தில்  பொறுப்புக் குழு தலைவர்களும் பொறுப்பாளர்களும்  களம் இறங்கி வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.