தேனி மாவட்டம்- பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அம்மாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில்,‘நான் பழனிசெட்டிப்பட்டியில் தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கிறேன். கடந்த 2018- ம் ஆண்டு ஆகஸ்ட் 22- ம் தேதி, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் பிரகாரம், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தனியாக ஆரம்பிக்கப்பட்டது.
அந்தக் கூட்டுறவு சங்கத்தில் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். தலைவர் மற்றும் நிர்வாகக்குழுவைத் தேர்வு செய்ய 17 உறுப்பினர்கள் தேவை என்பதால், மேலும் 13 உறுப்பினர்கள், தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தனர். அந்நிலையில், எவ்வித முன் அறிவிப்பின்றி தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி பதவியேற்றனர்.
தற்போது, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். எனவே, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.