தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓ.ராஜாவும் (துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர்) மற்றும் 16 உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம்- பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்த அம்மாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில்,‘நான் பழனிசெட்டிப்பட்டியில் தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கிறேன். கடந்த 2018- ம் ஆண்டு ஆகஸ்ட் 22- ம் தேதி, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் பிரகாரம், மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பிரித்து, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தனியாக ஆரம்பிக்கப்பட்டது.

 Theni District Dairy Producers Cooperative Society O RAJA MADURAI HIGH COURT BRANCH

Advertisment

அந்தக் கூட்டுறவு சங்கத்தில் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். தலைவர் மற்றும் நிர்வாகக்குழுவைத் தேர்வு செய்ய 17 உறுப்பினர்கள் தேவை என்பதால், மேலும் 13 உறுப்பினர்கள், தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தனர். அந்நிலையில், எவ்வித முன் அறிவிப்பின்றி தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 17 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 2-ம் தேதி பதவியேற்றனர்.

Advertisment

தற்போது, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பலரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். எனவே, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் தற்காலிகமாகநியமிக்கப்பட்டுள்ள தலைவர் மற்றும் உறுப்பினர்கள் செயல்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

 Theni District Dairy Producers Cooperative Society O RAJA MADURAI HIGH COURT BRANCH

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது அரசுத் தரப்பில்,‘17 உறுப்பினர்கள் நியமனம் தற்காலிகமானது, எனவே இந்த மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும்" என்று வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இடைக்கால நிர்வாக குழு உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (23.01.2020) இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி மற்றும் ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆவினின் விதிப்படி, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படாததால், தற்போதைய தேனி மாவட்ட ஆவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டனர். மேலும், ஆவின் ஆணையர், விதிகளைப் பின்பற்றி தற்காலிகக் குழுவையோ, நிரந்தரக் குழுவையோ அமைப்பது குறித்து முடிவு செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.