திருச்சி மாநகரம், மிளகுபாறை பகுதியை அடுத்துள்ள பொன்நகர்,நியூ செல்வா நகர் பகுதியில் வசித்துவருபவர் லட்சுமணன். கடந்த வார இறுதி நாட்களில் தொடர் விடுமுறை வந்ததால், குடும்பத்துடன் கிளம்பி பெங்களூர் சென்றார்.
இன்று காலை பெங்களூருவிலிருந்து வீடு திரும்பிய அவர், தனது வீட்டின் முன் பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து பதட்டத்தில் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் திருச்சி மாநகர காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காவல்துறையின் விசாரணையில், வீட்டில் இருந்த 13 பவுன் தங்க நகை, வெள்ளி குத்துவிளக்குகள், லேப்டாப் உள்ளிட்ட பொருள்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. மேலும், திருடு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வீட்டில் ஆள் இருக்கிறார்களா இல்லையா என்பதை அறிந்து கொள்ள ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்திருக்கிறது. அதன் காரணமாக மாநகர போலீசார் அந்த கும்பலைத் தேடி வருகின்றனர்.