Skip to main content

தொடரும் டாஸ்மாக் கொள்ளை... இருவரைக் கத்தியால் வெட்டிய கொள்ளையர்கள்...

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

Theft at kallakurichi tasmac


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது கொரட்டாங்குறிச்சி கிராமம். இந்தக் கிராமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் அரசின் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் மது பாட்டில் வாங்குவதற்காக அக்கம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த மது பிரியர்கள் நிறையபேர் வந்து செல்வார்கள். இந்தக் கடையில் கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் உதவியாளராகவும், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த கதிரவன் விற்பனையாளராகவும் பணியில் இருந்தனர். நேற்று இரவு கடையில் விற்பனையான பணத்தைக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

கணக்கை முடித்து, கடையை மூடும்போது திடீரென பைக்கில் வந்த 4 மர்ம நபர்கள், இருவரையும் கத்தியால் வெட்டி கடையின் சாவியைப் பிடுங்கி, பணத்தைக் கொள்ளையடித்துச் செல்ல முயன்றுள்ளனர். மர்ம நபர்களால் வெட்டுப்பட்ட ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவர்களும், டாஸ்மாக் கடையின் அருகில் பார் நடத்தி வந்த ஊழியர்களும் கொள்ளையர்களை துரத்திப் பிடிக்க முயன்றுள்ளனர். அவர்கள்மீது கொள்ளையர்கள் மிளகாய் பொடியை வீசிவிட்டு நான்கு கொள்ளையர்களும் தப்பிச் சென்றனர்.

 

Theft at kallakurichi tasmac

 

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட விற்பனையாளர் கதிரவன் மற்றும்  உதவியாளர் வெங்கடேசன் ஆகிய இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி விஜயகுமார் மற்றும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தின்போது டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் வசூலான 3 லட்சத்து 27 ஆயிரத்து 250 ரூபாய் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியுள்ளது எனத் தெரியவந்துள்ளது. இதே டாஸ்மாக் கடையில் ஏற்கனவே இரண்டு முறை கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Ad

 

இதேபோல, ஆசனூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் விற்பனையாளர்களைக் கடந்த மாதம் கத்தியால் வெட்டி விட்டு ரூ.3 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இப்படிக் கடந்த இரு மாதங்களாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. போலீசார், கொள்ளையர்களை விரைந்து பிடிக்க வேண்டுமென்று கூறுகிறார்கள் டாஸ்மாக் அலுவலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.