திருச்சி மாவட்டம், துறையூர், எ.கீழப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி (44). இவரின் மகள் பிரியங்கா. பிரியங்காவுக்கு உடல் நிலை சரியில்லாததால், அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார் வளர்மதி. அங்கு பிரியங்கா உள் நோயாளி பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். பிரியங்காவுக்கு உதவியாக அவரின் தாயும் மருத்துவமனையில் தங்கியுள்ளார்.
அவர், தன்னிடம் இருந்த ஏழரை பவுன் தங்க சங்கிலிகள், இரண்டு செல்போன்கள், ஏ.டி.எம், ஆதார் கார்டு ஆகியவற்றை தனது பையில் வைத்துவிட்டு நேற்று இரவு தூங்கியுள்ளார். காலை எழுந்து பார்த்தபோது, அவர் கைப்பையில் மேற்குறிப்பிட்ட பொருள்கள் அனைத்தும் காணாமல் போயுள்ளன.
உடனடியாக இதுகுறித்து அவர், திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், திருடிச்சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.