
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பகுதியாக உளுந்தூர்பேட்டை இருந்துவருகிறது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தினசரி பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் உளுந்தூர்பேட்டையை கடந்து செல்கின்றன. இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து 80க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றிக்கொண்டு ஒரு கண்டெய்னர் லாரி, கேரள மாநிலம் பாலக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை டிரைவர் நூறு முகமது என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். அவருடன் ராஜேஷ் உட்பட மூன்று பேர் லாரியில் பயணம் செய்துள்ளனர்.
இந்த லாரி, உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள செம்பியன் மாதேவி வனக்காட்டுப் பகுதியை நேற்று இரவு கடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் ஒரு காருடன் நின்று கொண்டிருந்த ஏழு பேர் கொண்ட கும்பல், லாரியை நிறுத்தி உதவி கேட்பது போல் நிறுத்த முயன்றுள்ளது. இதனால், லாரி டிரைவர் நூறு முகமதும் வண்டியை நிறுத்தியுள்ளார்.
வண்டியை நிறுத்தியதும், அந்தக் கும்பல் லாரியில் இருந்த ராஜேஷ் என்பவரின் செல்போனை பறித்துள்ளது. அதன்பிறகே அந்தக் கும்பல் வழிபறி கொள்ளையர்கள் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக லாரி டிரைவர் உட்பட வண்டியில் இருந்த நான்கு பேரும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகளும் வண்டியை நிறுத்திவிட்டு வந்து பார்த்துள்ளனர். அப்போது வழிபறி கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்து அவர்களை, வாகன ஓட்டிகள் மடக்கி பிடித்துள்ளனர். இதில், நான்கு பேர் சிக்கிக் கொள்ள மற்ற மூவரும் காரில் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
பிறகு பிடிபட்ட நான்கு பேரும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட நான்கு பேரும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் வேறு ஏதேனும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களா? அல்லது பழைய குற்றவாளிகளா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.