ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார்(43), தற்சமயம் சேலத்தில் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். பிளாஸ்டிக் பொருள் மொத்த வியாபாரம் தொழில் செய்து வரும் இவர், பல்வேறு மாவட்டங்களுக்கு விநியோகிக்கும் பொருள்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு தடவை சென்று பணம் வசூலித்து வருகிறார். அதேபோல் திருச்சியில் உள்ள கம்மாள தெருவில் அங்குள்ள சில்லறை வியாபாரிகளுக்கு பொருட்களை கொடுத்து விட்டு 15 நாட்களுக்கு பிறகு வந்து வசூல் செய்து பணம் எடுத்துச் செல்வார்.
அதன்படி கடந்த 12ஆம் தேதி இரவு 11.30 மணி அளவில் வசூல் செய்து விட்டு, திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் பணத்தை கொடுத்துவிட்டு நான்கு சக்கர வாகனத்தில் திருச்சி - சேலம் மாநில நெடுஞ்சாலையில் தனியாக வந்துள்ளார். அப்போது ஆமூர் வேகத்தடை அருகே வந்துகொண்டிருக்கும்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் காரில் வந்தவரை வழிமறித்து அவரது செல்போன் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை திருடி சென்றனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் காவல் தனிப்படையினர் ஈடுபட்டனர்.
தனிப்படையினரின் விசாரணையில், தினேஷ்குமார் அதிக பணம் வைத்துள்ளார் என்று அறிந்துகொண்ட ஹஞ்ஜாராம் என்பவர், ஆள் வைத்து அவரை தாக்கி பணம் பறிக்க திட்டமிட்டது தெரியவந்தது. அதனடிப்படையில் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் திருச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ஆ.சந்துரு, சலீம் மற்றும் ஜ.சந்துரு, வடக்கு தாரநல்லூர் பகுதியைச் சேர்ந்த மணிமாறன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும், ஹஞ்ஜாராமையும் கைது செய்தனர்.