Skip to main content

காவிரிக்காக போராடினால் திருட்டு வழக்கு! -பழிவாங்கும் இன்ஸ்பெக்டர் அமுதா!

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

“காவிரிக்காக போராட்டம் நடத்துனவதானே? போலீஸ் மேலேயே புகார் சொல்லுவாளா? திருடுபோன உன் நகை உனக்கு வரணும்னா நீ வெத்து பேப்பர்ல கையெழுத்து மட்டும் போட்டுக்குடு. அவளை, திருட்டு வழக்குல கைது பன்றேன்” என்று வளசரவாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா மிரட்டியிருப்பது நக்கீரனுக்கு புகாராக வர விசாரிக்க ஆரம்பித்தோம்.

துணை கமிஷனரிடம் புகார்கொடுத்துவிட்டு நம்மிடம் பேசிய ராணி, “நான் சென்னை வளசரவாக்கத்துல இருக்குற மகளிர் ஹாஸ்டலில் தங்கியிருக்கேன். சில நாட்களுக்கு முன்பு செளந்தர்யான்னு ஒரு பொண்ணு புதுசா வந்து ஹாஸ்டலில் ஜாயிண்ட் பண்ணினாங்க. திடீர்ன்னு பேக்குல வெச்சிருந்த பணத்தை காணோம்னு ஹாஸ்டல் மேம்கிட்ட சொன்னாங்க. அதுக்கப்புறம், வளசரவாக்கத்திலிருந்து கிரைம் இன்ஸ்பெக்டர் அமுதா மேடமும் போலீஸும் வந்து ஹாஸ்டலில் விசாரிச்சாங்க.

 

Theft case against Cauvery protest -Revenge Inspector Amuda!


அப்போ, பக்கத்து ரூம்ல காவிரி இஷ்யூக்காக போன வருடம் போராட்டம் நடத்தின பொண்ணும் இருந்தாங்க. அவங்கள பார்த்ததும்  ‘உன்னை இதுக்குமுன்னால ஸ்டேஷன்ல பார்த்துருக்கேனே? நீ காவிரிக்காக போராடின பொண்ணுதானே?’ன்னு கேட்டாங்க இன்ஸ்பெக்டர் அமுதா. அவங்களும் ஆமாம்னு சொன்னாங்க. அதிலிருந்து, பணம் காணாமல் போன பிரச்சனையை விசாரிக்காம அந்த பொண்ணை மட்டுமே விசாரிச்சுக்கிட்டிருந்தாங்க.

அதுக்கப்புறம், செளந்தர்யா ரூமை காலி பண்ணிடுச்சு. ஆனா, காலி பண்ணின அன்னைக்கு என் பேக்குல இருந்த மூன்றரை பவுன் நகையை காணும். பிளேடு போட்டு யாரோ கிழிச்சு அந்த பணத்தை எடுத்துருக்காங்க. உடனே, காவல்துறை கட்டுப்பாட்டு அறை அவசர உதவி எண் 100 க்கு ஃபோன் பண்ணி புகார் கொடுத்தேன். வளசரவாக்கம் காவல்நிலையத்திலிருந்து வந்து ஹாஸ்டலில் விசாரணை பண்ணிட்டு போனாங்க. மறுநாள், வளரசவாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்போனேன்.

 

Theft case against Cauvery protest -Revenge Inspector Amuda!


இன்ஸ்பெக்டர் அமுதா என்னோட புகாரை வாங்கி படிக்கக்கூட இல்ல. போனதிலிருந்தே  காவிரிக்காக போராடின பக்கத்து ரூம் பெண்ணை பற்றியே விசாரிச்சுக்கிட்டிருந்தாங்க. அதுமட்டுமில்ல, உன்னோட நகையை அவதான் எடுத்திருப்பா. நீ வெத்து பேப்பர்ல  சைன் மட்டும் பண்ணு. காணாமப்போன உன் நகை கிடைக்கும்னாங்க இன்ஸ்பெக்டர் அமுதா. என்ன மேடம்… எனக்கு உதவியா இருக்கிறவங்க மேலேயே சந்தேகப்படுறீங்க? அதுவும், அவங்களைப்பற்றியே விசாரிச்சுக்கிட்டிருக்கீங்க? இப்போ, வெத்து பேப்பர்ல கையெழுத்து போடச்சொல்றீங்க?ன்னு நான் கேட்டபோது, ‘நீ கையெழுத்து போட்டுக்கொடு உன் நகை உனக்கு கிடைக்கும்’னு மிரட்டினாங்க.

என்னோட புகாரை வெச்சு காவிரி போராட்டத்துல ஈடுபட்ட பெண்ணை திருட்டு புகாரில் கைது பண்ண பார்க்குறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டு கையெழுத்து போட மறுத்துட்டேன். அதனால், என்னோட புகாரை பதிவு பண்ணாம சி.எஸ்.ஆரும் போட்டுக்கொடுக்காம அனுப்பிட்டாங்க.

அதுக்கபுறம், தி.நகர் துணை கமிஷனர் அசோக் குமார் சார்க்கிட்ட போயி புகார் கொடுத்தேன். அவர், உத்தரவிட்ட பிறகுதான் சி.எஸ்.ஆர் காப்பியே கொடுத்தாங்க. அதுவும், நான் புகார் கொடுத்த நாளில் சி.எஸ்.ஆர். கொடுக்காம அதற்கு மறுநாள் புகார் கொடுத்த மாதிரி சி.எஸ்.ஆர். போட்டு கொடுத்தாங்க. திடீர்ன்னு பார்த்தா, காலி பண்ணிக்கிட்டுப் போன செளந்தர்யாங்குற பொண்ணு திரும்ப ஹாஸ்டலுக்கு வந்துடுச்சு.

என்னோட புகாருக்காக ஹாஸ்டலுக்கு வந்து விசாரணை பண்ணின இன்ஸ்பெக்டர் அமுதா செளந்தர்யாக்கிட்ட அஞ்சு நிமிஷம்கூட விசாரிக்கல. ஆனா, ஹாஸ்டலில் உள்ள மற்ற எல்லார்க்கிட்டேயும் தனித்தனியா  சுமார் 45 நிமிசத்துக்குமேல விசாரணை பண்ணினாங்க. செளந்தர்யாவை எதுவும் தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு எல்லோரையும் எச்சரிச்சாங்க.

என்னைப் பார்த்து, ஒரு காரணமாத்தான் வெத்து பேப்பர்ல சைன் கேட்டேன். நீ போட்டுக்கொடுக்கல. நீ யார்க்கிட்ட வேணாலும் போய் புகார் கொடு. ஆனா, எஃப்.ஐ.ஆர். போடணும்னா எங்கிட்டதான் வந்தாகணும். இதையும்போயி யார்க்கிட்ட சொல்லணுமோ சொல்லிக்கோன்னு கோபமா போய்ட்டாங்க. நான், யார்மேல சந்தேகப்படுறேனோ அவங்களை எல்லாம் விட்ட்டு எனக்கு யாரெல்லாம் உதவினாங்களோ, என்கூட இருக்கிறாங்களோ அந்த பொம்பள பிள்ளைங்களையெல்லாம் விசாரணைங்குற பேர்ல டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்காங்க.

செளந்தர்யாங்குற பொண்ணுக்கு யாரோ அசோக்நகர்ல முத்துங்குற போலீஸை தெரியுமாம். அதனால, அந்த பொண்ணு பணம் காணலைன்னு சொன்ன அன்னைக்கே இன்ஸ்பெக்டர் அமுதாவே வந்து நேர்ல விசாரணை பண்ணினாங்க. ஆனா, என் புகாரை விசாரிக்காம… பழைய பகையை  எல்லாம் மனசுல வெச்சுக்கிட்டு பழிவாங்குறதுக்காக என் புகாரை பயன்படுத்திக்கிட்டிருக்காங்க” என்று கண்கலங்கி அழுகிறார் புகார் கொடுத்த ராணி.        

குற்றச்சாட்டு குறித்து வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் அமுதாவிடம் நாம் கேட்டபோது, “செளந்தர்யா ஹாஸ்டலில் பணத்தை காணவில்லை என்று புகார் கொடுத்தார். பிறகு, ராணி தனது நகையை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இருவரது புகாருக்கும் சி.எஸ்.ஆர். கொடுத்து விசாரணை நடத்திவருகிறேன். நான், காவிரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை மிரட்டவும் இல்லை. வெத்துப்பேப்பரில் கையெழுத்து கேட்டும் மிரட்டவுமில்லை” என்று அடியோடு மறுத்தவரிடம் 'நீங்கள் வெத்து பேப்பரில் கையெழுத்துக்கேட்டு ராணியிடம் மிரட்டிய ஆதாரம் உள்ளது' என்று சொன்னபோது ‘நேரில் வாருங்கள் பேசலாம்’ என்று ஃபோனை துண்டித்தார்.  

அதாவது, காவிரி மேலாண்மை அமைக்கோரியும் பிரதமர் நரேந்திரமோடியின் தமிழக வருகையை கண்டித்தும் ‘கோ பேக் மோடி’ என்று கடந்த 2018 ஏப்ரல் 12 ந்தேதி சினிமா இயக்குனர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் கருப்புச்சட்டை அணிந்து வடபழனி மெட்ரோ ரயிலில் ஏறி போராடப்போவதாக வடபழனி போலிஸார் அவர்களை கைது செய்தனர்.

அப்போது, காவல்துறையின் விசாரணையை செல்ஃபோன் மூலம் ரெக்கார்டு செய்கிறீர்களா என்று  பரிசோதனை என்கிற பெயரில் பெண் உதவி இயக்குனர்களின் ஆடைகளை கழட்டி அத்து மீறியதாக வடபழனி காவல்நிலைய போலீஸார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இப்படி பரிசோதனை செய்ய உத்தரவிட்டது வடபழனி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சந்துரு என்றும் உதவி இயக்குனர்கள் கண்ணீரோடு குற்றஞ்சாட்டினார்கள். இதனால், உயரதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளானார்கள் வடபழனி போலீஸார். இதனை, மனதில் வைத்துக்கொண்டுதான் வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் அமுதா செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

திருட்டு புகாரில் யார் திருடியது என்று விசாரிப்பதற்கு பதில் காவிரிக்காக போராடியதாலும் காவல்துறையின் அராஜகத்தை கண்டித்து பேட்டிக்கொடுத்ததாலும் பழிவாங்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். இதுகுறித்து, உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள்.  காவிரிக்காக போராடியவர்களை பழிவாங்கத்துடிக்கும் இன்ஸ்பெக்டர் அமுதா காட்டை அழித்துவிட்டு  காவிரிக்காக கூக்குரல் கொடுக்கும் சாமியார் ஜக்கி வாசுதேவை கைது செய்வாரா? ஒருவேளை,  ஜாக்கி வாசுதேவ் போராட்டம் பொய்யானது என்று தெரிந்ததால் கைதுசெய்யாமல் இருக்கிறார்போல ஹி ஹி!

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.