Skip to main content

அரசுப் பேருந்தில் பயணம் செய்த மூதாட்டியிடம் 23 பவுன் திருட்டு...

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

Theft of 23 pounds from an old woman traveling in a government bus ...
                                                  மாதிரி படம்


விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகிலுள்ள கலந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி, வயது 62. இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சென்னையில் உள்ள உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றுவிட்டு, டிசம்பர் 2ஆம் தேதி, 7 மணி அளவில் சென்னையில் இருந்து விழுப்புரம் வரும் அரசுப் பேருந்தில் ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். அப்படி வரும்போது அவர் அணிந்திருந்த 23 பவுன் நகையைக் கழட்டி ஒரு சிறிய பெட்டியில் பாதுகாப்பாக வைத்து, அதை ஒரு பைக்குள் வைத்து எடுத்து வந்துள்ளார். 

 

விழுப்புரம் புது பேருந்து நிலையம் வந்து இறங்கும்போது, சென்னையிலிருந்து மூதாட்டியின் அருகில் அமர்ந்து பயணம் செய்துவந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் மூதாட்டி வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு, அவசர அவசரமாகப் பேருந்திலிருந்து இறங்கி ஓடியுள்ளார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டி சக பயணிகளிடம் கூறி அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து உள்ளார். அப்போது அப்பெண் தனது பையை எடுப்பதற்குப் பதிலாக, மூதாட்டி பையைத் தவறுதலாக மாற்றி எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறி, மூதாட்டி விஜயலட்சுமியிடம் அவரது பையை ஒப்படைத்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து சென்றுவிட்டார். 

 

இதை நம்பி, பையை வாங்கிய மூதாட்டி, அதே இடத்தில், நகை உள்ளதா என்பதை திறந்து பார்க்காமல், தனது பையை எடுத்துக் கொண்டு விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி சொந்த ஊரான, கலந்தல் கிராமத்திற்குச் சென்றுவிட்டார். பின்னர், வீடு சென்ற விஜயலட்சுமி, தன்னுடைய பையைத் திறந்து பார்த்தபோது, அதில் 23 பவுன் நகையை வைத்திருந்த சிறிய பெட்டியைக் காணவில்லை. 


அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமிக்கு, விழுப்புரத்தில் பேருந்தைவிட்டு இறங்கும்போது பையைத் தவறுதலாக மாற்றி எடுத்துக் கொண்டு சென்றதாகக் கூறிய அந்தப் பெண்ணே நகையைத் திருடிச் சென்றுள்ளார் என்பது தெரிந்துள்ளது. இதையடுத்து மூதாட்டி விஜயலட்சுமி, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி வைத்திருந்த நகையைத் திருடிச் சென்ற அந்த மர்ம பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். நகையின் மதிப்பு ஏழரை லட்சம் என்று கூறப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.