Skip to main content

தாரமங்கலம் கோயில் விழாவில் மோதல்; கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

தாரமங்கலம் கோயில் தேர்த்திருவிழாவின்போது இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, வருவாய்த்துறை கோட்டாட்சியர் தலைமையில் புதன்கிழமை (பிப். 12) அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
 

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் மிகப்பழமையான கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் நான்காவது வாரத்தில் தேர்த்திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

tharamangalam temple festival incident tasildar speech

அண்மையில் மூன்று நாள்கள் தேர்த்திருவிழா நடந்தது. மூன்றாம் நாளன்று தேர் நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது இரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடையே திடீரென்று மோதல் உருவானது. இந்த மோதலின்போது விழாவுக்காக சாலையோரம் பொருத்தப்பட்டிருந்த குழல் விளக்குகள், மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 
 

இக்கோயிலின் இன்னொரு முக்கியமான தோரோட்ட நிகழ்ச்சி ஒன்றும் நாளை வியாழக்கிழமை (பிப். 13) நடத்தப்பட உள்ளது. ஆனால் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட குழு மோதலுக்கு சுமூகத்தீர்வு காணும் வரை தோரோட்டம் நடத்தக்கூடாது என்று சிலர் கூறினர்.
 

இதையடுத்து மேட்டூர் வருவாய்க் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில், ஓமலூரில் புதன்கிழமை (பிப். 12) அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. ஓமலூர் டிஎஸ்பி பாஸ்கரன், முன்னாள் எம்எல்ஏ கண்ணையன், கந்தசாமி, பாலசுப்ரமணி உள்பட தாரமங்கலத்தைச் சேர்ந்த கிராமப் பொதுமக்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
 

வியாழக்கிழமை நடைபெற உள்ள தேரோட்டத்தை பிரச்சனைகள் இல்லாத வகையில் நடத்துவது, சாதி ரீதியிலான மோதலை உருவாக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் யாரும் பிளக்ஸ், பேனர்கள் அச்சடிக்கக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டது. 

பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைதி பேச்சுவார்த்தையின் போது முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுகளை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து, கூட்டம் நிறைவு பெற்றது. எனினும், தாரமங்கலத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நாய் சடலம்; மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Dog carcass in drinking water tank; Again a sensational incident

ஒரு வருடத்திற்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஒரு ஆண்டை கடந்து தற்பொழுது வரை இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதேபோன்று பொது இடங்களில் மனிதக் கழிவுகள் கலக்கப்படுவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அண்மையில் காஞ்சிபுரத்தில் பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக பரபரப்பு புகார்கள் எழ, அந்த தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே நீர்த்தேக்க தொட்டியில் இறந்த நாயின் சடலம் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள துட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆட்டையான் வளைவு பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டியில் இருந்து அரசுப் பள்ளி மற்றும் ஐந்து கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வழக்கம்போல குடிநீர் ஆபரேட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி தண்ணீர் நிரம்பியுள்ளதா என்று சோதனை செய்தபோது அங்கு நாய் ஒன்று இறந்த நிலையில் நீரில் மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த தாரமங்கலம் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; ஆண் நண்பருடன் சேர்ந்து 1 வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்!

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

salem tharamangalam brick clamp workers one year old baby incident 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மல்லேஷ் (வயது32). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர். இந்த நிலையில் பிழைப்புக்காக சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். அதே செங்கல் சூளையில் ஈரோட்டை சேர்ந்த சக்திவேல் - கலைவாணி தம்பதியினர் தனது ஒரு வயது பெண் குழந்தையுடன் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் மல்லேஷுக்கும் கலைவாணிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. மேலும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த மாதம் கலைவாணி தனது ஒரு வயது குழந்தையுடன் மல்லேஷுடன் சேர்ந்து வாழ செங்கல் சூளையில் இருந்து சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து மல்லேஷ் - கலைவாணி இருவரும் தங்களை கணவன், மனைவி என்று கூறி ஓமலூர் அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலைக்கு சேர்ந்து பணி செய்து வந்துள்ளனர். இதனிடையே மற்றவரின் குழந்தையை என்னால் பார்த்துக்கொள்ள முடியாது என்று கூறி கலைவாணியிடம் மல்லேஷ் தகராறு செய்து வந்திருக்கிறார்.

 

இந்த நிலையில் இருவரும் சம்பவத்தன்று சேர்ந்து மது அருந்திவிட்டு தனிமையில் இருந்துள்ளனர். அப்போது குழந்தை அழுதுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அழுத குழந்தையை தூக்கி சுவரில் அடித்துள்ளனர். மறுநாள் காலையில் குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கிருந்த  மருத்துவர்கள் படுகாயமடைந்த குழந்தையை உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில்  இருவரையும் கைது செய்துள்ளனர்.