Vanathi Srinivasan

தமிழகத்தின் கரும்பு விவசாயிகளை காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த ஆகஸ்ட் 1, 2018 அன்று தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்க நிர்வாகிகள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். சந்திப்பின் போது, கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்கூறினர்.

Advertisment

கடும் வறட்சியின் காரணமாக சர்க்கரை ஆலைகளின் உற்பத்தி செலவு அதிகரித்து வருவதாகவும், இதனால் ஆலைகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர். நஷ்டத்தில் இயங்கும் சர்க்கரை ஆலைகளை மூடினால், தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்படுவர் என்பதை எடுத்துரைத்தனர்.

தமிழக பிரதிநிதிகளின் இந்த கவலைகளை பிரதமர் புரிந்துக் கொண்டதை அடுத்து அவரின் வழிகாட்டுதலின் பேரில் மத்திய அரசு கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி அதிகாரபூர்வமான அறிவிப்பு ஒன்றை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் எப்படிப்பட்ட இயற்கைப் பேரழிவு ஏற்பட்டாலும் நாடு முழுவதும் சர்க்கரைத் தொழில் துறையின் கடன்களை மறுசீரமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Vanathi Srinivasan

இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் 10%-க்கும் மேலான பங்களிப்பை தமிழ் நாடு வழங்கும் நிலையில், 41 தமிழக சர்க்கரை ஆலைகளின் நிதி சார்ந்த சுமைகளை குறைக்கும் வகையில் பெரிய நிவாரணமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. இந்த உடனடி நடவடிக்கை பிரதமர் மோடி அரசின் நல்லாட்சி மற்றும் செயல்திறனை காட்டுவதாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் நன்மையைக் கருதி சர்க்கரைத் தொழில் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி துரிதமான நடவடிக்கைகள் எடுத்துள்ளது கரும்பு விவசாயிகளுக்கு தற்போது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவருக்கு தமிழர்கள் சார்பாக நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முயற்சிகளுக்கு பெரும் துணை நின்ற மத்திய அமைச்சர் நிர்மலா நீதாராமன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இவ்வாறு கூறியுள்ளார்.