சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்காக, அங்கிருந்த குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுவதால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்த சீமான், திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, சீமானுக்கு அக்கட்சியின் தொண்டர்கள் முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து சென்றனர்.
இந்நிலையில், அவரின் உடல்நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரிடம் நலம் விசாரித்ததாகவும், இதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சீமான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.