ஒரு நண்பரின் தந்தை இறந்ததால், அவர் மீண்டும் மரமாக எழுவார் என்று ஆயிரம் விதைப்பந்துகளை வீசியுள்ளனர் நண்பர்கள்.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சிகள், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் மரக்கன்றுகள் நட்டு விழா தொடங்குவதும், விழாவுக்கு வருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவதும் வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர்.
அந்த வகையில், தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள நாடியம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் நிமல் ராகவன். இவர் புயல் நேரத்தில் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அதைத் தொடர்ந்து சக நண்பர்களை இணைத்துக் கொண்டு மீட்புப் பணிகள் முதல் நிவாரணப் பணிகள் வரை செய்தார். மேலும், நிலத்தடி நீரைச் சேமிக்க டெல்டா மாவட்டங்களில் பல வருடங்களாகத் தூர்வாரப்படாத நீர்நிலைகளை சீரமைக்க இரு மாவட்ட தன்னார்வ இளைஞர்களுடன் இணைந்து 'கைஃபா' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பல நிறுவனங்கள், தன்னார்வலர்களின் உதவியுடன் சுமார் 75 பெரிய ஏரி, குளங்களை சீரமைக்கப்பட்டது. டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கும் நேரில் சென்று கலந்து கொண்டார்.
இவரது தந்தை ராகவன் உடல்நலக்கோளாறு காரணமாக நேற்று முன்தினம் (09/04/2021) மறைந்தார். இந்த நிலையில் அவரது துக்க நிகழ்வுக்கு சென்ற நிமல் ராகவனின் நண்பர்கள் நிமலின் தந்தை புதைக்கப்படவில்லை விதைக்கப்படுகிறார் என்று சுமார் 1000 விதைப் பந்துகளை ராகவன் தகனம் செய்யப்பட்ட பகுதியில் விதைத்துள்ளனர். மேலும் நண்பனின் தந்தை மீண்டு மரமாக எழுவார் என்றனர்.