Skip to main content

இருப்பது இரண்டு வாரங்கள்... தேவையோ ரூ. 4 கோடி... குழந்தையின் உயிர்காக்க பெற்றோரின் பாசப்போராட்டம்...

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

thanjavur couple raising funds to save save their daughter bharathi from Spinal muscular atrophy

 

முதுகு தண்டுவட தசை நார் சிதைவு (SMA) நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது 23 மாத பச்சிளம் குழந்தையின் உயிரைக் காக்கப் போராடி வருகின்றனர் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெகதீஷ், எழிலரசி தம்பதியினர். 

 

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை சீராஜ்பூர் நகரைச் சேர்ந்த ஜெகதீஷ், எழிலரசி ஆகியோரின் மகள் பாரதி. பிறந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகாத இப்பச்சிளம் குழந்தையின் உயிரை மெல்லக் குடித்து வருகிறது SMA எனும் கொடிய நோய். 

 

பேசுவது, நடப்பது, மூச்சு விடுவது மற்றும் விழுங்குதல் போன்ற அடிப்படை மனித இயக்கங்களை, மூளை மற்றும் முதுகெலும்பு பகுதிகளில் அமைந்திருக்கும்  நரம்பு செல்களே கட்டுப்படுத்துகின்றன. இந்த நரம்பு செல்களின் செயல்பாடுகளைப் பாதித்து மனிதனின் அடிப்படை இயக்கங்களையே மேற்கொள்ள முடியாமல் செய்து, உயிரிழப்பு வரை கொண்டுவிட்டுவிடக் கூடியது இந்த நோய். 

 

இப்படிப்பட்ட இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குழந்தையைக் காப்பாற்ற பண உதவிக்காகப் பொதுமக்களை நாடியுள்ளனர் ஜெகதீஷ், எழிலரசி தம்பதியினர். பிறந்தபோது ஆரோக்கியமாகக் காணப்பட்ட இவர்களது குழந்தை பாரதி, இரண்டு வயதை நெருங்கும்போது தானாக எழுந்து நிற்க முடியாமல் இருந்துள்ளது. இதனையடுத்து குழந்தைக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில், முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 'ZOLGENSMA', என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே இந்நோயின் பிடியிலிருந்து சிறுமியைக் காக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த ஒற்றை மருந்தின் விலை 16 கோடி ரூபாய் என அறிந்து, அதிர்ச்சியடைந்த குழந்தை பாரதியின் பெற்றோர், சிகிச்சைக்குத் தேவையான போதிய பணத்தைத் திரட்ட முடியாமல் கடைசி நம்பிக்கையாகப் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

 

06.11.2021 அன்று தனது இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடவேண்டிய குழந்தை பாரதிக்கு, அதற்குள்ளாக அந்த ஊசியைச் செலுத்த வேண்டும் என்றார் நம்முடன் பேசிய குழந்தையின் தாய் எழிலரசி. மேலும், "சிறுதுளி பெருவெள்ளம் என்ற உதவியவர்களால் இதுவரை (20.10.2021) 12 கோடி கிடைத்துள்ளது. மீதமுள்ள 4 கோடியை அடைய நீங்களும் உங்களின் நண்பர்களும் சிறு உதவி செய்தால் கூட ( 4 லட்சம் பேர் x 100 ரூபாய்) அவளின் இரண்டாவது பிறந்தநாள் 06.11.2021க்குள் இந்த ஊசியைச் செலுத்தி அவளின் உயிரைக் காப்பாற்றி விடலாம்" எனக் கூறி மக்கள் மீதான நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் குழந்தையின் பெற்றோர் ஜெகதீஷ் மற்றும் எழிலரசி.

 

பெற்றோரின் தொடர்பு எண்கள்...
ஜெகதீஷ் - 9791793435
எழிலரசி - 9597584987

நேரடியாக பண உதவி செய்ய வங்கி கணக்கு விவரம்..
R. Jagadeesh
Account No. 1147155000168550
IFSC. KVBL0001147
Bank. Karur vysya bank

G pay, phone pe & paytm 9791793435

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.