தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள முடச்சிக்காடு ஊராட்சி பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த ஏப்.28 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரது கணவர், பேராவூரணியில் பழக்கடை ஒரு பழக்கடையில் கார், வேன் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்ததால் பழக்கடை உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள், கடை ஊழியர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், குழந்தைகள், அக்கம்பக்கத்தினர், அவருடன் தொடர்புடையவர்கள் என 30 பேருக்கு கரோனா தொற்று உள்ளதா என்று கண்டறிவதற்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் பேராவூரணி அரசு மருத்துவமனையில் எடுத்து தஞ்சையில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனை முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியானது. சுகாதாரத் துறையின் இந்த தகவலால், பேராவூரணி பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருந்த போதிலும் அப்பெண்ணுக்கு எவ்வாறு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.