Skip to main content

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும்-தமிமுன் அன்சாரி வலியுறுத்தல் 

Published on 23/10/2020 | Edited on 23/10/2020
thaminun ansari statement

 

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்த மசோதா  மீது முடிவெடுக்க மூன்று முதல் நான்கு வாரங்கள் தேவை என ஆளுநர் தெரிவித்திருக்கும் நிலையில், இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஆளுநரின் தாமதத்திற்கு கண்டனம் தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி அறிக்கை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில், 

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக கவர்னர் ஒப்புதளிக்காமல்  கால தாமதம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த உள் இடஒதுக்கீடு கோரிக்கையை தமிழக சட்டமன்றத்தில் முதலில் எழுப்பியது நாங்கள் தான்.

அந்த வகையில் இந்த மசோதா சட்டமாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதிக்காட்டுகிறோம்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சார்பில், மக்கள் பிரதிநிதிகளால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவது என்பது ஆளுனரின் ஜனநாயக கடமையாகும்.

எளிய மக்களின் நலன் காக்கும் ஒரு சமூக நீதி விவகாரத்தில், முடிவெடுப்பதற்கு நான்கு வாரங்கள் வரை ஆகலாம் என கவர்னர் மாளிகை தெரிவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. இது மாணவர் சேர்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, இச்சட்டத்தையே நீர்த்து போகச் செய்யும் நோக்கமும் கொண்டதாக இருக்கிறது.

இம்மசோதா குறித்து சமீபத்தில் தமிழக அமைச்சர்கள் கவர்னரை சந்தித்தப் போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால், இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருகிறோம் என அவர் சொன்னதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது.  இதன் உண்மைத்தன்மை குறித்து தமிழக அமைச்சர்கள் விளக்க வேண்டும்.

கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசின் இந்த மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இல்லையேல் மக்கள் ஆதரவுடன் ஜனநாயக வழி போராட்டங்கள் வலிமை பெறுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்பதையும் எச்சரிக்கையுடன் சுட்டிக் காட்டுகிறோம் எனக்கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.