Skip to main content

இலங்கை தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்! மு.தமிமுன் அன்சாரி

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

 

இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைப்பெற்ற தன் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு தஞ்சாவூரில் நடைப்பெற்றது. தஞ்சை விளாரில் உள்ள "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில்" பழ.நெடுமாறன் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று உரையாற்றினார்.


 

அப்போது அவர், 
 


இந்த முற்றம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் கோரங்களை சிற்பங்களாக கொண்டுள்ளது. சோகம் நிறைந்த இந்த இடத்திற்கு மூன்றாவது முறையாக வருகிறேன். நாளை உலக தமிழர்கள், முள்ளிவாய்க்கால் கொடூரங்களை உணர இங்கு கூட்டம், கூட்டமாக வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
 

ஈழத் தமிழர்களின் பெருங்கனவை  வல்லரசு நாடுகள் இணைந்து சிதறடித்தன. தெற்காசியாவில் எதிரும், புதிருமாக ஆதிக்கம் செலுத்தும் சீனா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள், இவ்விஷயத்தில் சிங்கள பேரினவாதத்துடன் இணைந்து செயலாற்றிய வினோதம் நடந்தது. ஐ.நா.சபை கண்டும், காணாமல் நிற்கிறது. பாலஸ்தீனர்களுக்கு துரோகம் செய்யும் ஐ.நா சபை, ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை விடயத்திலும் துரோகம் செய்கிறது.
 

 இந்தோனேஷியாவிலிருந்து கிழக்கு தீமோரையும், சூடானிலிருந்து தெற்கு சூடானையும் இதே ஐ.நா.சபைதான் பொது வாக்கெடுப்பு நடத்தி பிரித்தது. ஐ.நா.சபை ஆளுக்கொரு நிலைபாட்டை எடுக்கிறது. அங்கு நீதி தடுமாறுகிறது.

 

thamimun ansari


 

இலங்கையில் யுத்தத்தின் போது பல கொடூரங்களை வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஒரு கர்ப்பிணியான தமிழச்சியின் வயிற்றை தோட்டாக்கள் துளைத்தது. அந்த அதிர்வில் பிரசவித்த குழந்தைக்கு, தன் தாய் இறந்தது  தெரியவில்லை.
 

நெஞ்சில் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடிய ஒரு தமிழச்சியை குண்டு துளைத்தது. அவள் துடித்து இறந்தாள். தாய் இறந்தது தெரியாமல் அந்த குழந்தை பாலுக்காக தன் தாயின் மார்பை சுவைத்தது. இவையெல்லாம் தாங்க முடியாத கொடுமைகள்.
 

செர்பிய இனப் படுகொலைகளைகளையும், பாலஸ்தீன நெருக்கடிகளையும் பார்த்தவர்களுக்கு இதன் வலி புரியும். எனவே தான் இவற்றுக்கு நீதி வேண்டி நிற்கிறோம். அவர்களின் தியாகங்கள் வீண் போகாது. உண்மையும், உழைப்பும் அழியாது.
 

2009ல் முள்ளிவாய்க்காலில்  ஆயுதங்களை அவர்கள் மெளனித்து விட்டார்கள். ஆனால் அவர்களின் உரிமைக்கான நியாயங்கள் தொடர்ந்து பயணிக்கிறது.
 

இப்போது இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். அவர்களும், ஈழத் தமிழர்களும் கைக்கோர்க்க வேண்டும். சிங்கள  பேரினவாதத்தை எதிர்க்க வேண்டும்.
 

 

முன்பு பழ.நெடுமாறனும், சிராஜில் மில்லத் அப்துல் சமது அவர்களும் சேர்ந்து ஈழத் தமிழின பிரதிநிதிகளையும், இலங்கை தமிழ் பேசும் முஸ்லிம் தலைவர்களையும் தமிழகத்திற்கு வரவழைத்து கலந்துரையாடல் நடத்தினர். அதை இப்போதும் செய்ய வேண்டிய சூழல் வந்துள்ளது. அதை நாம் செய்வோம்.
 

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தனது வெளியுறவு துறை கொள்கையை மறுபரிசீவனை செய்ய வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அங்கு அனைத்து இன மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.


 

உலகமெங்கும் வாழும் தமிழர்கள்  இன்றைய சர்வதேச அரசியலை உள்வாங்கி, அதன்கேற்ப அறிவாயுதங்களை கையிலேந்தி நீதிக்காக போராட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 

இதில் வைகோ, பெ.மணியரசன், குடந்தை அரசன், தெஹ்லான் பாகவி,  உள்ளிட்டோர் பேசினர். தனியரசு எம்எல்ஏ, புலவர் காசி ஆனந்தன், எம்ஜிகே நிஜாமுதீன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மஜக தஞ்சை மாநகர் மாவட்ட செயலர் அஹ்மது கபீர், தஞ்சை வடக்கு மாவட்ட செயலர் மஹ்ரூப், திருச்சி மாவட்ட செயலர் அஷ்ரப் உள்ளிட்ட மஜக நிர்வாகிகளும், பொதுச் செயலாளருடன் இம் மாநாட்டிற்கு  வருகை தந்திருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.