Skip to main content

பிடிபட்ட கருப்பன் யானை; கேமராக்கள் வைத்து கண்காணிக்கும் வனத்துறை

Published on 18/04/2023 | Edited on 18/04/2023

 

thalavadi elephant karuppan watches under cctv and surveillance by forest department

 

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை கடந்த ஒரு வருடமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வந்தது. அங்கு பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை, மக்காச்சோளம், ராகி, முட்டைக்கோஸ் போன்ற பயிர்களை சேதப்படுத்தியது. மேலும் காவலுக்கு இருந்த இரண்டு விவசாயிகளையும் மிதித்துக் கொன்றது.

 

இதனை அடுத்து கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என தாளவாடி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே மூன்று முறை கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கருப்பனை பிடிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கிட்டத்தட்ட 6 முறை மயக்க ஊசி செலுத்தியும் கருப்பன் யானை வனத்துறையினரிடம் இருந்து தப்பித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது ஊருக்குள் வந்து நிலங்களை சேதப்படுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து 4-வது முறையாக கருப்பன் யானையைப் பிடிக்க மாரியப்பன், சின்னத்தம்பி என 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. இந்த முறை கருப்பன் யானையை பிடித்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

 

அதன்படி யானை வரும் வழித்தடத்தை கண்டறிந்து அங்கு சென்றனர். தாளவாடி அடுத்த மகாராஜன்புரம் பகுதியில் உள்ள ஒரு விவசாய கரும்பு தோட்டத்திற்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு கருப்பன் யானை வந்தது. அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் கருப்பன் யானை மீது மயக்க ஊசி செலுத்தினர். காலை 5.35 மணி அளவில் கருப்பன் யானைக்கு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் கருப்பன் யானை மயங்கியபடி நின்று கொண்டே இருந்தது. உடனடியாக வனத்துறை லாரியில் கருப்பன் யானையை ஏற்ற முயன்றனர். ஆனால் ஏற மறுத்து அடம் பிடித்தது. கும்கி யானை மாரியப்பன் உதவியுடன் கருப்பன் யானையை லாரியில் ஏற்றும் முயற்சி நடந்தது. அப்போது கும்கி யானையுடன் ஆக்ரோஷமாக கருப்பன் யானை சண்டையிட்டது. சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு யானை லாரியில் ஏற்றப்பட்டது. பின்னர் தமிழக - கர்நாடக எல்லை பகுதியான பர்கூர் தட்டகரை வனப்பகுதியில் கருப்பன் யானை இறக்கி விடப்பட்டது. சிறிது நேரம் மயக்கத்திலே இருந்த கருப்பன் யானை அதன் பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.

 

கருப்பன் யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் வனத்துறையினர் தட்டகரை வனப்பகுதியில் 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியை விட்டு கருப்பன் யானை வெளியேறாமல் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தட்டகரை வனப்பகுதியில் கருப்பன் யானைக்கு தேவையான உணவு, தண்ணீர் கிடைக்கும் என்பதால் அந்த இடம் தேர்வு செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் தட்டகரை பயணியர் விடுதியில் இரண்டு பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.