Thaipusa Jyoti Darshan in Vadalur- Jyoti Darshan shown with seven screens removed

'அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' ஆக வாழ்ந்தவர் ராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார். கடலூர் மாவட்டம் வடலூர் அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் பிறந்தவர். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவிய வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியை போக்க, சத்தியஞான சபையில் தருமசாலையை நிறுவினார். அன்று முதல் இன்றுவரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கி வருகிறது.

Advertisment

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 -ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7.30 மணிக்கு தர்ம சாலையில் சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களிலும், காலை 10 மணிக்கு சத்திய ஞான சபையிலும் கொடியேற்றம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம்.

Thaipusa Jyoti Darshan in Vadalur- Jyoti Darshan shown with seven screens removed

Advertisment

பொதுவாக தை மாதம் தவிர்த்த பிற மாத பூச நட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தன்று மட்டும் ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். கண்ணாடிக் கதவுகளில் கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியா சக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி என கருமை, நீலம், பசுமை, சிவப்பு, பொன்மை, வெண்மை, கலப்பு என ஒன்றிற்கொன்று நிற அடர்த்தி குறைந்து வரும் ஏழு திரைகள் விலக, ஜோதி தரிசனம் தெரிந்ததை 'அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை', 'அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை' என கோஷமெழுப்பியபடி பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

கடலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உலகில் பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி இன்று அதிகாலை முதல் ஜோதி தரிசனத்தை தரிசித்தனர். தொடர்ந்து காலை 10 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி, நாளை காலை 5.30 மணி ஆகிய நேரங்களில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

வடலூா் தைப்பூச விழாவையொட்டி, குற்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், போக்குவரத்தை சீா் செய்யவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் 800 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்றுகின்றனர். 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.