Skip to main content

தைப்பூசத்தையொட்டி திருமுருகன் குடில் அமைத்து சீமான் வேல்வழிபாடு...

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
seeman



 

இன்று தைபூசத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இதுதொடர்பாக வெளியான நாம் தமிழர் கட்சி அறிக்கை...
 

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! நமது இன மூதாதை! முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றும் தைப்பூசத் திருநாளில் (21-01-2019) நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்புக்கான பாசறையான வீரத்தமிழர் முன்னணியைச் சேர்ந்த சென்னை, மதுரவாயல் உறவுகள் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இல்லத்தில் திருமுருகன் குடில் அமைத்து முப்பாட்டன் முருகனின் திருவுருவச் சிலையும் வேலும் நிறுவி வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று தமிழர் மெய்யியல் முறைப்படி உறுதிமொழியேற்று வேல்வழிபாடு செய்தார். பின்னர் அனைவருக்கும் தினைமாவு உருண்டை, சிற்றுண்டி மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
 

தைப்பூசம் மற்றும் வேல்வழிபாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இறைவனே இந்த உலகத்தைப் படைத்தார், அவரே எல்லா உயிரினங்களையும் படைத்தார், அவரே எல்லாவற்றையும் செய்வார், அவரே ஆட்டுவிப்பார், அவரே ஆடுவார் என்ற மாயக் கற்பனைக் கதைகளில் சிக்கி அலைவது, அதே மாயக்கதைகளை நமது வருங்கால சந்ததிக்கு சொல்லி வைப்பது அல்ல எங்களுடைய இறையோனின் தேடல். நீண்ட வரலாற்றை கொண்ட இந்தத் தமிழ் சமுதாயத்திற்கு எல்லாமே இயற்கையாகவே அமைந்துவிட்டது. அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல், மொழி, அதன்வழி வந்த இலக்கியம் என எல்லாம் பெற்று இந்த புவி மாந்தரில் கோலோச்சிய இனம் இந்தத் தமிழ் இனம். அந்த இனத்திற்கு தனித்த பெருமையுடைய இறையோனும் இருக்கிறார். அந்த இறையோனே தமிழர் இறை முருகன் ஆவார்.
 

தமிழர் வாழும் நிலங்களில் எல்லாம், தமிழர் குடும்பங்களில் எல்லாம் முருகனின் பெயர் சுமந்து காணப்படுவது, தமிழர் வாழ்வில் முருகன் இரண்டற கலந்ததற்கான சான்று. அப்படிப்பட்ட தமிழர் இறை முருகனை தை மாதம் 7 ஆம் தேதி(21/01/2019) தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுதும் பரவி வாழ்கிற தமிழர்கள், தமிழ் இறையோன் குறிஞ்சி நிலத்தலைவன் தமிழர் இறை முருகனை வணங்கி, முருகனின் பெரும்புகழைப் போற்றி கொண்டாட இருக்கிறோம்.
 

அந்த பண்பாட்டு நிகழ்வு மேலும் சிறக்கும் வகையில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் குடில் அமைத்து முருகனே வடிவான "வேல்" ஐ நிறுவி வழிபட இருக்கிறோம், வேல் என்னும் சொல் 'வெல்' என்னும் அடிச் சொல்லிலிருந்து தோன்றியது. வெல் என்றால் வெற்றி பெறு என்பது பொருள். எனவே வேல் என்றால் வெற்றி. அந்த வேல் எடுத்து வரலாற்று தொன்மை மிக்க தமிழ் தேசிய இனத்தின் பண்பாடு மற்றும் வழிபாட்டு விழுமியங்களை மீட்டெடுப்போம்.
 

ஆகையால் உறவுகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் தை 5,6, மற்றும் தைப்பூச நாளான தை 7 உள்ளிட்ட மூன்று நாட்களிலும் குடில் அமைத்து "வேல்" நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்தி சிற்றுண்டி உணவுகள் வழங்குமாறு நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணி, மற்றும் அனைத்து பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். வெல்வழிபாட்டிற்கு என்று வீரத்தமிழர் முன்னணி சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் வேல்வழிபாட்டு நெறிமுறைகளின் படி, தங்களின் ஊர்களில் முருகன் குடில் அமைத்து அதில் வேலினை வழிபட வேண்டுகிறேன்.
 

தமிழரின் விடுதலை, தமிழர் பண்பாட்டு விடுதலையில் இருக்கிறது. தமிழர் பண்பாட்டின் விடுதலை என்பது கலப்படமற்ற தமிழர் வழிபாட்டில் இருக்கிறது. அவற்றை வேல்வழிபாட்டின் மூலம் மீட்டெடுப்போம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்