Skip to main content

இளம்பெண்ணை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குறுஞ்செய்தி... ஹெல்மெட் இளைஞரை கைது செய்த போலீஸ்!

Published on 10/01/2022 | Edited on 10/01/2022

 

The text message that shocked the girl

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகரில் உள்ளது பெரியார் வீதி. இங்கு தேசிய வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று செயல்படுகிறது. இந்த மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சிறுமுளை கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் மனைவி நர்மதா(21) என்பவர் சென்றுள்ளார். அவருக்கு ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கத் தெரியாமல் தடுமாறியுள்ளார். அப்போது ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர் அந்த ஏடிஎம் மையத்திற்குள் வந்துள்ளார். அவரிடம் நர்மதா தனது ஏடிஎம் கார்டைக் கொடுத்து பணம் எடுத்துத் தருமாறு கூறியுள்ளார்.

 

அந்த இளைஞரும் நர்மதா சொன்ன தொகையை அவரது ஏடிஎம் கார்டு பயன்படுத்தி எடுத்துக் கொடுத்துள்ளார். பணத்தையும் ஏடிஎம் கார்டையும் இளைஞரிடம் இருந்து வாங்கிக் கொண்டு வெளியே சென்ற அரை மணி நேரத்தில் நர்மதாவின் செல்போனுக்கு மேலும் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நர்மதாவிற்கு அப்போதுதான் தன்னிடம் அந்த இளைஞர் கொடுத்த ஏடிஎம் கார்டு தன்னுடையது இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

 

உடனடியாக நர்மதா திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நர்மதா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் ஏடிஎம் மையத்தில் மோசடியாக பணம் எடுத்த நபரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பெரியார் நகர் அருகே சந்தேகப்படும் அளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

 

அதில் அவர் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பதும் இவர்தான் நர்மதாவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ஏடிஎம் மையத்தில் மோசடியாக பணம் எடுத்த இளைஞரை ஓரிரு நாட்களில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திட்டக்குடி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.