Skip to main content

தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

Terrible fire at a private factory

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - புதுச்சேரி சாலையில், பெரும்பாக்கம் கிராம எல்லையில் கடலூரைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கு சொந்தமான தின்னர் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலை உள்ளது. அந்த தொழிற்சாலையில் தினசரி 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (25.04.2021) மதியம் 12 மணி அளவில் 30 பேர் பணியில் இருந்துள்ளனர். அப்போது சுரேஷ் என்ற தொழிலாளி, பாரலில் தின்னர் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 

 

அதில் சுரேஷுக்கு உடலில் பலத்த தீ காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலம் சுரேஷை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் தொழிற்சாலையில் தீ மளமளவென பரவ தொடங்கியதால் உள்ளே வேலை செய்துகொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தப்பி வெளியே ஓடி வந்து கூச்சலிட்டனர். இதையடுத்து மயிலம் காவல் நிலையத்திற்கும் திண்டிவனம் மற்றும் வானூர் ஆகிய ஊர்களில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் மேலும் கிடுகிடுவென கரும்புகையைக் கக்கியபடியே தீ கொழுந்துவிட்டு எரிந்தது. 

 

Terrible fire at a private factory

 

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், திண்டிவனம் டிஎஸ்பி கணேசன், கோட்டகுப்பம் டிஎஸ்பி அஜய் தங்கம் மற்றும் போலீசார் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். தொழிற்சாலை எரிவதை வேடிக்கை பார்க்கத் திரண்டிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார்கள். தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். எரிந்துகொண்டிருந்த தொழிற்சாலையில் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட தின்னர் பாரல்கள் அனைத்தும் தீயில் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் மிகப்பெரும் கரும்புகை கிளம்பியது. 

 

அதனால் திண்டிவனம் விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, பல மணி நேரம் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் கம்பெனியில் இருந்த டேங்கர் லாரி 250க்கும் மேற்பட்ட பாரல்களில் இருந்த தின்னர் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. நேற்று மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவுசெய்து தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலையோரத்தில் கருகி உயிரிழந்து கிடந்த இளம் பெண்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A young woman was burnt to on the roadside; Bagheer information revealed in the investigation

கேரளாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் இளம்பெண் கருகிய நிலையில் உயிரிழந்த சம்பவத்தில், முறையற்ற தொடர்பால் பெண் கொலை  செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு காங்காட்டுபடி பகுதியைச் சேர்ந்தவர் பிரவியா(31). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரவியா காணாமல் போன நிலையில் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில் பட்டாம்பி எனும் பகுதிக்கு அருகேயுள்ள சாலையோரத்தில் கருகிய நிலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது பிரவியாவின் உடல் என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஆலுரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. ஏற்கெனவே திருமணமான பிரவியா கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். சந்தோஷ் வைத்திருந்த ஜெராக்ஸ் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார் பிரவியா. அப்பொழுது அவருக்கும் சந்தோஷிற்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சந்தோஷுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் சில நாட்களாக சந்தோஷிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார் பிரவியா. அந்த நேரத்தில் பிரவியாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வரும் 21ஆம் தேதி திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சந்தோஷிடம் பேசுவதை முற்றிலுமாக பிரிவியா தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் அவரை கடத்திச் சென்று எரித்து கொலை செய்து, உடலை சாலை ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளார். எப்படியும் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரித்து தன்னைப் பிடித்து வருவார்கள் எனக்கருதிய சந்தோஷ், வீட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.