Skip to main content

சீர்காழி புறவழிச்சாலையில் அரசு பேருந்து பயங்கர விபத்து! நான்கு பேர் உயிரிழப்பு!

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

Terrible accident of government bus on Sirkazhi bypass road!

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புறவழிச்சாலையில் பழுதடைந்து நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின் பகுதியில் அரசு விரைவு பேருந்து மோதிய கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததோடு 25 பேர் படுகாயத்துடன் சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெருத்த சோகத்தை உண்டாக்கியுள்ளது. 

 

திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேசமயம், சீர்காழி அருகே பாதரகுடி என்கிற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் நாகை மாவட்டம், நரிமணத்திலிருந்து பெட்ரோலிய குருடாயில் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி பழுதாகி சாலையோரம் நின்றிருந்தது.

 

Terrible accident of government bus on Sirkazhi bypass road!

 

இந்நிலையில், அதி வேகத்தில் வந்த அரசு பேருந்து டேங்கர் லாரியின் பின் புறத்தில் மோதியது. இதில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதேசமயம், சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சிதம்பரம் பள்ளிப்படை பகுதியை சேர்ந்த குருக்கள் பத்மநாபன் அவரது மகன் அருள்ராஜ் மற்றும் பாலமுருகன் ஆகிய மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பேருந்து சக்கரத்தின் அடியில் இருசக்கர வாகனம் சிக்கியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

மேலும் பேருந்து முன் பகுதி டேங்கர் லாரியில் மோதி முற்றிலும் சேதமடைந்தது. இதில் முன் பகுதியில் அமர்ந்திருந்த நடத்துநர் சீட்டுடன் தூக்கி சாலையில் வீசப்பட்டு விழுந்தார். திருவண்ணாமலையைச் சேர்ந்த நடத்துநர் விஜயசாரதி சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர். 

 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். இறந்தவர்களின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

 

காயமடைந்த 25 பேரும் சீர்காழி அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், பலத்த காயம் அடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை தமுமுக ஆம்புலன்ஸ், 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மூலமாக விரைந்து மீட்டு சிகிச்சையில் சேர்த்தனர். விபத்து தொடர்பாக சீர்காழி டி.எஸ்.பி லாமேக் வழக்குப்பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் பிரதாப் மற்றும் லாரி ஓட்டுநர் ஜான்பியர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Terrible accident of government bus on Sirkazhi bypass road!

 

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிக்காக சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை முழுவதும் பழுதடைந்தும் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டும் இரு பக்கம் வரக்கூடிய பேருந்துகள் ஒரே சாலையில் சென்று வருகிறது. சாலைகள் போடும் பணியால் மின்விளக்கு இல்லாமல் இருளில் சாலை எது எனத் தெரியாத அளவில் இருட்டுப் பகுதியாக உள்ளதால் டேங்கர் லாரி பழுதடைந்து நின்றது தெரியாமல் அரசு பேருந்து ஓட்டுநர் அதன்மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது மோதியதே விபத்திற்கு காரணம் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

 

லாரியின் பின் பகுதி உடைந்து குருடாயில் வெளியே சாலையில் ஊற்றிக் கொண்டிருப்பதால் தீப்பற்றிக் கொள்ளாமல் இருக்க தீயணைப்புத் துறையினர் நுரை தண்ணீரை பீய்ச்சியடித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.