
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக கூடுதல் பாதுகாப்புப் பணிகளில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரும், துணை ராணுவத்தினர், ரயில்வே பாதுகாப்புப் படைவீரர்களும் இதில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை ஆவடி, வேலூரில் இருந்து தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் 160 பேர் கடந்த 8ம் தேதி ஈரோடு வந்தனர். இந்நிலையில், 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டதையடுத்து கூடுதலாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
இதற்காக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2 கம்பெனி துணை ராணுவத்தினர் 184 பேர் ரெயில் மூலமாக 10ந் தேதி இரவும் ,11ந் தேதி காலையும் ஈரோடு வந்தடைந்தனர். இது தவிர இந்திய ரயில்வே பாதுகாப்புப் படைவீரர்களும் வருகை தந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 12ந் தேதிக்குள் மேலும் இரண்டு கம்பெனி துணை ராணுவ படைவீரர்கள் ஈரோட்டுக்கு வருகை தர உள்ளனர். இவர்கள், வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பெட்டிகள் மீண்டும் தேர்தல் பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு செல்லும் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக அவர்கள் வாக்கு எண்ணிக்கையின் மறுநாளான மார்ச் 3ம் தேதி வரை ஈரோட்டில் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். குறிப்பாக, துணை ராணுவத்தினர் பதற்றமான வாக்குச்சாவடிகளில் முழுநேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.