Skip to main content

ராஜபார்ட் அதிகாரி மீது பாய்ந்தது நடவடிக்கை! 

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

Tenkasi School Education Officer Sudalai transferred to kudalore

 

ராஜபார்ட் கெட்டப்பில் பள்ளியை ஆய்வுசெய்த பள்ளிக் கல்வி அதிகாரி, மேலதிகாரிகளின் விசாரணை, நடவடிக்கை என்று வேதனையோடு சந்தித்துக்கொண்டிருக்கிறார்.

 

தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வுபெற்று வந்திருப்பவர் சுடலை. ஆரம்பத்தில் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்த சுடலை, கடந்த 2019ஆம் ஆண்டு மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்று சேரன்மகாதேவி மற்றும் திருநெல்வேலி கல்வி மாவட்டங்களில் பணிபுரிந்திருக்கிறார். அதன் பின், பணி மாறுதலாகி 2 மாதங்களுக்கு முன்புதான் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றார். கல்வி மாவட்டத்தின் சுமார் 150க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அதிகாரி சுடலையின் ஆய்வுக்கு உட்பட்டவை என்கிறார்கள்.

 

இந்நிலையில், மாவட்டக் கல்வி அதிகாரி சுடலை பணி மாறுதலாகி வந்த பின்பு முதன்முதலாக கடந்த 14ஆம் தேதியன்று மாவட்டத்தின் கடையம் நகரில் இயங்கிவருகிற அரசு உதவி பெறும் தனியார் மகளிர் உயர்நிலைப் பள்ளிக்கு ஆய்வுக்காகச் சென்றுள்ளார். மாவட்டக் கல்வி அதிகாரி முதன்முதலாகத் தங்கள் பள்ளிக்கு ஆய்வின் பொருட்டு வருவதால், அவரைச் சிறப்பாக வரவேற்க எண்ணிய நிர்வாகத்தின் பொறுப்பாளரான மணி, அதற்கான ஏற்பாடுகனைச் செய்தார். பள்ளி ஆசிரியர்கள் சகிதம் அதிகாரி சுடலைக்கு மாலையும் சால்வையும் அணிவித்த மணி, மன்னர் ரேஞ்சுக்குப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மலர்க் கிரீடத்தையும் அவரது தலையில் அணிவித்து ஏறத்தாழ ராஜபார்ட் கெட்டப் கொடுத்து வரவேற்பு அளித்துள்ளனர். இயல்பாகவே அதிகாரி சுடலை, தனது இரண்டு கை விரல்களிலும் கவர்ச்சியான மோதிரங்களைப் போட்டிருப்பது அவரது பழக்கங்களில் ஒன்று.

 

பள்ளி நிர்வாகம் வரவேற்பு அளித்ததை ஏற்றுக்கொண்டவர், அணிந்த மறுகணமே யதார்த்தமாக மாலை இத்யாதிகளை அகற்றியிருக்க வேண்டும். ஆனால், ராஜ அம்ச வரவேற்போடு போர்த்திய சால்வையுடனும் மாவட்டக் கல்வி அதிகாரி ஆய்வு செய்ததுடன், ஆய்வுப் பதிவேட்டில் கையெழுத்திட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அந்த கெட்டப் நிகழ்வுகளைப் புகைப்படமாகவும் அதிகாரி எடுத்து வைத்துக்கொண்டாராம். இதுவே அவருக்கு வினையாக அமைந்திருக்கிறதாம்.

 

Tenkasi School Education Officer Sudalai transferred to kudalore
சுடலை 

 

மாவட்டத்திற்குப் பணி மாறி வந்த விளம்பரப் பிரியரான அதிகாரி சுடலை, எந்த மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் தனது பணியின் விசேஷமான நிகழ்வுகளையும், படங்களையும் தன்னுடைய துறையின் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்துகொள்வது அவரது இயல்பாம். அதற்கேற்ப அரிதிலும் அரிதான, தான் எடுத்த ராஜபார்ட் கெட்டப் ஆய்வின் புகைப்படத்தைத் தன்னுடைய துறையின் குரூப்பில் இயல்பாக வெளியிட்டிருக்கிறாராம். அவரது நேரம், துறை வாட்ஸ் அப்பில் பகிரப்பட்ட அதிகாரியின் இந்த அரிதார அவதாரப் படத்தைக் கல்வித்துறையின் யாரோ ஒருவர், வேறு குரூப்பில் பகிர்ந்துகொள்ள, அதிகாரியின் ராஜதர்பார் ஆய்வு வைரலாகிவிட்டது. நெட்டிசன்கன் பலமாதிரியான கமெண்ட்களைப் பதிவுசெய்து தள்ளிவிட்டனர்.

 

அதிகாரியின் இந்த ராஜாதி ராஜ ஆய்வு அரசுத்துறையின் உயரதிகாரிவரை போக, பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர், நடந்தவற்றை விசாரிக்க தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியான கபீர், நேற்றைய தினம் (20.12.2021) நடந்தவைகளை விரிவாக விசாரணை செய்து அறிக்கையை மேலிடத்திற்கு அனுப்பியிருக்கிறாராம். 

 

இதுகுறித்து நாம் மாவட்டக் கல்வி அதிகாரியான சுடலையை தொடர்புகொண்டபோது, “பள்ளிக்கு நான் ஆய்வின் பொருட்டு சென்றபோது, அவர்கள் மகிழ்ச்சியில் புதிய அதிகாரி ஆய்விற்கு வருகிறார், வரவேற்க வேண்டும் என்றெண்ணி இந்த வரவேற்பு அளித்தார்கள். நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனா பள்ளி நிர்வாகத்தினர் கட்டயாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதால் ஏற்றுக்கொண்டேன். ஆசிரியர் பதிவேட்டில் கையெழுத்திட்டேன். அது இவ்வளவு தூரம் போகும்னு நெனக்கல்ல. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் விசாரணையில் நடந்தவைகளைச் சொல்லியுள்ளேன்” என்கிறார்.

 

இந்நிலையில், இன்று விசாரணைக்குப் பின்னர் அதிகாரி சுடலை கூடலூருக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Leopard movement Holiday for 9 schools

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) இரவு 11 மணியளவில் சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தையின் கால் தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி. கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர்.

அதே சமயம் சிறுத்தை நடமாடத்தை கண்காணிக்க 10 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க 10 குழுக்களை அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதோடு வனத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் சிறுத்தையைப் பார்த்தால் 9994884357 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் அளிக்க வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் 9 பள்ளிகளுக்கு இன்று (05.04.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலை பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி, கேம்பிரிட்ஸ் பள்ளி, சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, மறையூர் தூய அந்தோனியார் தொடக்க பள்ளி, ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி, அழகுஜோதி நர்சரி பிரைமரி பள்ளி என 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.