தென்காசி மாவட்டத்தின், சங்கரன்கோவில் சப்-டிவிசனில் வருவது சின்னக் கோவிலான்குளம். அங்கே குடியிருக்கும் குட்டிராஜ் என்பவரது மகன் செந்தில் குமார்(31) திருமணமாகாதவர்.
செந்தில்குமார் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றாலும் சைக்கோ. தனக்கு ஏதாவது பிறர் இடர் செய்தால் மூர்க்கமாகிவிடுவது இவரது இயல்பு. இதற்கு சிகிச்சையளிப்பதற்காக இவரது பெற்றோர்கள் கடந்த 6 வருடங்களாக வெளியிலிருந்தவாறே சிகிச்சையை மேற்கொண்டிருக்கின்றனர். இதன் பின் காப்பகத்திலிருந்து அண்மையில்தான் கிராமத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்கள் பெற்றோர்.
வீடு வந்த பின்பு மனநலம் பாதிப்பு காரணமாக இரவில் வீட்டார் யாரையும் தூங்க விடாமல் கூச்சலான சப்தத்தை எழுப்பியவாறிருப்பாராம். தவிர அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே ஓடிவிடும் செந்தில்குமாரை மற்றவர்கள் பிடித்துக்கொண்டு வருமளவுக்குக் கட்டுப்பாடில்லாமல் திரிந்திருக்கிறார். இதனால் அவரை நெல்லையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க முடிவு செய்திருந்தனர். இதனிடையே பக்கத்திலுள்ளவரின் செல்போன் காணாமல் போனதை செந்தில்குமார் எடுத்திருக்கலாம் என்று சந்தேகத்தில் அவனை தேடியிருக்கிறார்கள், அவர் ஒரு வீட்டில் ஒளிந்திருக்கிறார். அவரை அழைத்து வர அவனது தந்தை மற்றும் உறவினர் முயன்றபோது வர மறுத்த அவர், அந்த வீட்டுக் கண்ணாடியை உடைத்திருக்கிறார். அவரை ஆட்டோ ஒன்றில் ஏற்ற முற்பட்டபோது முரண்டு பிடித்தவர் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து டிவைரை தாக்க முயல, இதனால் ஆத்திரமான தந்தையும், உறவினரும் சேர்ந்து செந்தில்குமாரை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அடித்து உதைத்திருக்கிறார்கள். அதே சமயம் செல்போன் சம்பந்தமாகப் போலீசில் புகாரானதும், விசாரித்த போலீசார் அவரை சிகிச்சைக்காக காப்பகத்தில் சேர்க்க அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர்.
தந்தையும், உறவினரும் அவரை சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயன்றபோது முரண்டு பிடித்து ஆத்திரமான செந்தில்குமார் அவர்களை தாக்க முற்பட்டிருக்கிறான். இதனால் ஆத்திரமான அவரது தந்தையும், உறவினரும் அவரைக் கண்ட்ரோல் செய்வதற்காக அருகிலுள்ள ஆலமரத்தில் கட்டி கட்டையால் சரமாரியாக அடித்திருக்கிறார்களாம். இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பனவடலிசத்திரம் போலீசார் கொலை சம்பவம் எப்படி நடந்தது என்று செந்தில்குமாரின் தந்தை குட்டிராஜையும், உறவினர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.
புத்தி சுவாதீனம் இல்லாதவரை கையாளும் வழி தெரியாமல், கொடிய கொலைபாதகச் செயலை இரக்கமில்லாமல் நடத்தியது பஞ்சமாபாதகம் என்கிறது மனுதர்மம்.