Skip to main content

கோயில் வாழ்ந்தால் குடி வாழும்... பொய்கைத் தெப்பத்தில் தேர் ஓடினால் ஊர் சிறக்கும்... ஏங்கும் பக்தர்கள்!

Published on 26/01/2022 | Edited on 26/01/2022

 

tenkasi district temple festival peoples

 

கோயில் வாழ்ந்தால் குடி வாழும். ஆவுடைப்பொய்கை தெப்பத்தில் தேர் ஓடினால் ஊர் சிறக்கும். ஆதிகாலத் தமிழர்கள் இதனை அர்த்தமில்லாமல் சொல்லவில்லை. விவசாயம் சார்ந்த வேளாண் குடிமக்கள், பிற தொழிலைக் கொண்டவர்கள், தங்களின் தொழிலின் ஆரம்பத்திலும் முடிவிலும், ஆண்டவனைச் சார்ந்தே வந்துள்ளனர். குறிப்பாக தைமாதங்களில் அறுவடை செய்யப்படும். முற்றிய நெல்மணிகளை அறுவடை செய்கிற மக்கள் அந்நெல்லின் புத்தரிசியைக் கொண்டு தைத்திருநாளில் பொங்கலிட்டு சூரியக் கடவுளுக்குப் படையலிட்டு வழிபடுவது மரபு. 

 

அதன் காரணமாகவே விவசாயமும், ஊரும் செழிப்பானது என்ற நம்பிக்கை கொண்டவர்கள். காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த மரபுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். அப்படி நடந்தால் தான் குடிமக்கள் வாழ்வர் என்று நம்பியவர்கள். ஆன்மீகம் சார்ந்த எந்த ஒரு விழாவையும் இதுவரை நிறுத்தியதில்லை.

tenkasi district temple festival peoples

தென்காசி மாவட்டத்தின் கோயில் நகரைக் கொண்ட சங்கரன்கோவில் தொழில் நகரம். இங்குள்ள சங்கரநாராயண சுவாமி ஆலயத்தின் ஒவ்வொரு ஆடிமாதப் பௌர்ணமியும் சிறப்பு வாய்ந்தது. அன்னை ஸ்ரீ கோமதியம்மனுக்கு, சர்வேஸ்வரன் அரியும் சிவனுமாக ஒரு சேர உடலில் அவதாரமெடுத்து சங்கர நாராயணராகக் காட்சி கொடுத்த வரலாற்று நகரம். தென்மாவட்டத்தின் முக்கிய சிவஸ்தலம். அந்த ஆடி மாதத்தில் திருத் தேர்கள் சிறப்பாக வலம் வரும்.

 

அதே போன்று இந்த ஆலயத்திற்கான ஆவுடைப்பொய்கையில் நடக்கிற தெப்ப உற்சவம் தென்மாவட்டத்தில் பிரசித்தியானது. ஒவ்வொரு தைமாதக் கடைசி வெள்ளிக்கிழமையன்று சுவாமியும் அம்பாளும் எழுந்தருளுகிற தேர் ஆவுடைப்பொய்கை தெப்பத்தில் இரவு நேரம் ஜெகஜ்ஜோதியாய் மின்னியபடி வலம் வரும். அது சமயம் தென்மாவட்டமக்கள் இந்த விஷேச நாளில் திரண்டு ஆராதிப்பர். நகரமும் சிறப்பானது . அப்பேர்பட்ட ஆவுடையப் பொய்கைதெப்பம் பராமரிப்பின்றி சிதிலமடைந்ததால் 2016 முதல் 2020 வரை தொடர்ந்து ஐந்து வருடங்கள் தெப்பத்திருத்தேர் ஓடவில்லை. 

tenkasi district temple festival peoples

இதனால் கவலை கொண்ட நகர பக்தர்களின் தொடர் வற்புறுத்தலால் கடந்த ஆண்டு பிப். 12- ல் தெப்பத்தேர் ஓடியது. அதன்பின் ஆவுடைப் பொய்கை தெப்பம் பராமரிக்கப்படாததால் சுற்றுச்சுவர் சிதிலமடைந்தும், தண்ணீரில் அடர்த்தியாகப் பாசியும் படர்ந்து களையிழந்தது தெப்பம்.

 

தற்போது இதனை சீரமைக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் நகர அய்யப்பசேவா சங்கத்தினர் செந்திலாண்டவன் திருச்சபையினர் அறநிலையத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

 

அந்த மனுவில், "நகரிலுள்ள அனைத்து ஆன்மீக அமைப்பினர், தன்னார்வலர்கள் பிப் 6- ஆம் தேதி ஆவுடைப்பொய்கை தெப்பத்தை சீர் செய்ய முடிவு செய்துள்ளோம். பொய்கை தீர்த்தம் நகராட்சியின் பொறுப்பில் வருவதால், அவர்கள் சீரமைப்பிற்கான அனைத்து பொருட்களையும் வழங்கினால் போதும் நாங்கள் பணிகளை மேற்கொள்வோம். பிப்ரவரி வெள்ளியன்று திருத்தேர் சிறப்பாக வலம் வரும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.

 

அதிகாரிகள் மனது வைத்தால் பொய்கை தெப்பம் சீராகும். திருத்தேர் பவனி வரும்; நகரம் பொலிவுபெறும் என்ற எதிர்பார்ப்பிலிருக்கின்றனர் மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.