அசைவச் சாப்பாட்டின் மீது அளவுக்கு மீறி ஆசைப்பட்டதன் காரணமாக அதற்கு உயிரையே விலையாகக் கொடுக்க வேண்டியதாயிற்று.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க 144 லாக்டவுண் ஊரடங்கு ஒரு மாதத்திற்கும் மேல் தொடர்கிறது. நாடே வீடுகளில் முடங்கிக்கிடக்கிறது. இந்த கேப்பில் உணவில் விருப்பம் கொண்டவர்கள் பல வகையான ருசி கொண்டவைகளையே நாடுகின்றனர். ஆனால் கிராமப்புறங்கள் அப்படியல்ல. அசைவப் பிரியர்கள் சந்தையில் கிடைக்கிற மட்டன் வகையறாக்களின் விலை அதிகம் என்பதால் கிராமப்புறக் காடுகளுக்கு வேட்டைக்குக் கிளம்பி விடுகின்றனர். கிடைப்பவைகளைஒரு பிடி பிடிக்கின்றனர். இது தான் கிராமப் புறங்களின் ஹாபி.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த அருணாச்சலப் பேரியைச் சேர்ந்த கிருஷ்ணபாண்டி, தன் தோட்டத்தில் சோளம் பயிரிட்டதோடு அதனை விலங்குகள் அழித்துவிடக் கூடாது என்பதற்காக வயலைச் சுற்றி அனுமதியில்லாமல் மின் வேலி அமைத்திருந்தார்.
நேற்று முன்தினம் (28/04/2020) இரவு மருதபுரம் கிராமத்தின் செல்வகணபதி (22), அவரது நண்பர் விஜயன் (21), இருவரும் மட்டன் ஆசையில் குறிப்பாக முயல்கறியின் ருசியின் பொருட்டு முயல் வேட்டைக்குக் கிளம்பியிருக்கிறார்கள். வயல் குழிக்குள் பதுங்கியிருந்து முயல்களைப் பிடிப்பதற்காக இருந்த அவர்கள் மின்வேலி இருப்பதை அறியாமல் அதில் மிதித்துவிட்டனர். அப்போது மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்ததில், செல்வகணபதி, விஜயன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்களுக்குத் திருமணமாகவில்லை.
தகவலிருந்த ஆலங்களம் எஸ்.ஐ. பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் இருவரது உடல்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
அளவுக்கு அதிகமான அசைவ ஆசை, உயிரையே பறித்திருக்கிறது.