tenkasi Courtallam elephant incident

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பதிவானதன் காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 3 வயது ஆண் குட்டி யானை ஒன்று அடர் வனப்பகுதிக்குள் இருந்து வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த குட்டி யானை உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியிலும், வன உயிரின ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குட்டி யானை உயிரிழந்ததை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தென்காசி மாவட்ட ஆட்சியருடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.