வளர்ப்பு தந்தையால் தாயான சிறுமி! - மிரட்டும் நரபலி பின்னணி?

Tenkasi Baby night puja case

ஒரு பெண்ணின் வாழ்க்கையும், அவளது மகளின் வாழ்க்கையும் இப்படி ஒரு பூகம்பத்தில் சிக்கியிருக்கக்கூடாதுதான்!

சிவகாசி, சிவானந்தம் நகரில் வசிக்கும் 37 வயது பெண், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, கங்காதரன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ்ந்துவந்தார். இவருக்கு 15 வயதிலும் 10 வயதிலும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

பெற்றால்தான் பிள்ளையா? என்ற நல்ல மனது இல்லாதவனாக கங்காதரன் இருந்திருக்கிறான். இன்னொருவருக்குப் பிறந்தவள்தானே என்ற கெட்ட எண்ணத்தில், மகளென்றும் பாராமல் மிரட்டியே, தன் இச்சையைத் தீர்த்திருக்கிறான். இதன் காரணமாக, 15 வயது சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறாள். கடந்த ஜூலை 30ஆம் தேதி அவளுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

முறைகேடான உறவால், அதுவும் சிறுமிக்குப் பிறந்த குழந்தை என்பதால், தடுப்பூசி போடவோ, பிறப்பு சான்றிதழ் பெற பதிவு செய்யவோ முடியாத நிலை ஏற்பட, குழந்தையின் எதிர்காலம் கருதி சிறுமியின் தாய், கங்காதரன் மீது சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, கங்காதரன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான கங்காதரனின் குடும்பப்பின்னணி திகிலடையச் செய்வதாக இருக்கிறது. கங்காதரனின் அப்பா வாசுதேவன், சிவானந்தம் நகரில் உள்ள பாம்பாட்டி சித்தர் கோவிலில்சாமியாராக இருந்துவருகிறார். அதனால், கங்காதரனும் சாமியார் வேடத்தில் வாழ்ந்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி, சிறுமிக்குத் தன் மூலம் பிறந்த ஆண் குழந்தையை எடுத்துச்சென்று, தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகிலுள்ள கடனாநதி பகுதியில் இரவு பூஜை செய்திருக்கிறார். நரபலி ஸ்டைலில் பூஜை நடந்ததைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், போலீஸுக்குத் தகவல் தர, வாசுதேவன், கங்காதரன் உள்ளிட்ட அனைவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்துவிட்டு, ‘வெறும் பூஜைதானே!’ என்று விடுவித்துள்ளனர்.

ஆனாலும்அந்தக் கிராம மக்கள், ‘நல்லவேளை நாங்கள் பார்த்தோம்; குழந்தை உயிர் பிழைத்தது!’ என்று பேசிவருகின்றனர். போலிசாமியார்கள் இந்த மாதிரியான கொடூர காரியங்களிலெல்லாம் ஈடுபடுவது கொடுமையானது!

Sivakasi Tenkasi
இதையும் படியுங்கள்
Subscribe