Skip to main content

டெண்டர் முறைகேடு வழக்கு.... எடப்பாடியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

Published on 14/09/2022 | Edited on 14/09/2022

 

 Tender malpractice case.... The court rejected Edappadi's request!

 

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கு தொடர்ந்திருந்தார். உச்சநீதிமன்றம் வரை சென்ற வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

 

இன்று இந்த வழக்கு விசாரணை நீதிபதி இளந்திரையனுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கை வைத்தது. லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் 'ஏற்கனவே இந்த வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை முடித்துள்ளது. இதன் அறிக்கை ஆணையரிடம் உள்ளது' என தெரிவித்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனுத்தாக்கல் செய்யும் வரை இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், வழக்கை செப்.26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததோடு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டது.  

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.