திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் தலைமையில், மாநகரத்தில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை கடை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்த நபர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது உரிய பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டு, உரிய முன்னெச்சரிக்கை வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தற்காலிக பட்டாசு கடைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டது.
இதில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம், திருச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் அலுவலக வளாகம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலாம் அலுவலகம், திருச்சி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு அங்காடி உள்ளிட்ட 50 இடங்களில் நிபந்தனையுடன் கூடிய தற்காலிக பட்டாசு விற்பனைக் கடை நடத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற்ற நபர்கள் விதிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும், தீயணைப்பு வாகனங்கள் அதிகளவில் வைத்திருக்க வேண்டும், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் குழந்தைகளைப் பட்டாசு கடை அருகே அனுமதிக்கக் கூடாது, தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையம் அல்லது 101 தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளைக் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
அனுமதிக்கப்பட்ட பட்டாசு அளவைவிட கூடுதலாக சேமித்து வைத்திருக்க கூடாது, கடையின் முன்பு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கக் கூடாது, சாலை ஓரங்களில் இருக்கும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்தல் கூடாது, வெடிபொருள் சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தற்காலிக பட்டாசு உரிமும் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.