
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவருகிறது. கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்துவருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதற்கிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பல இடங்களில் உள்ள சாலைகளில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில், சென்னை கே.கே. நகரில் உள்ள நெசப்பாக்கம் கழிவுநீர் அகற்றும் வாரியம் எதிரே டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக வாகனம் நின்றுகொண்டிருந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில், ஆட்கள் இல்லாமல் நின்றுகொண்டிருந்த டெம்போ டிராவலர் பள்ளத்திற்கு உள்ளே சிக்கியது. இந்த நிகழ்வின்போது வாகனத்தில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதன் பின்னர் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்து பள்ளத்தை மூடும் பணியைத் துவங்கினர்.