ADVERTISEMENT

கோயில் ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்கக் கோரிய வழக்கு!- இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

07:16 AM Jul 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உதவித் தொகை வழங்கக் கோரி, தினமலர் பத்திரிகை ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால்ஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேசன் மற்றும் ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பாக, மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் மற்றும் வழக்கறிஞர் கௌசிக் சர்மா ஆகியோர் ஆஜரானார்கள். ராஜகோபால் முன்வைத்த வாதத்தில் - இந்த வழக்கில் இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்த பதில் மனுவை நாங்கள் பார்த்தோம். அதில் பல முரண்பாடுகள் உள்ளன. தமிழக அரசு அரசாணையில் 8 ஆயிரத்து 340 பேர்தான் பலன் பெறுகிறார்கள் என்று வெளியிட்டுள்ளது. ஆனால், இந்துசமய அறநிலையத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் கோயில் பூசாரிகளுக்கு நாங்கள் உதவித்தொகை வழங்கி உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதவிர, கிராமக் கோயில்கள் எல்லாவற்றையும் நிர்வகிக்க கிராமப் பூசாரிகள் என்ற அமைப்பு உள்ளது. அந்த அமைப்பு மூலம்தான், நிவாரண உதவித்தொகை 8 ஆயிரத்து 340 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.

இதில் உள்ள அனைத்துத் தகவல்களும் முரண்பாடாக உள்ளன. எனவே, கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் மட்டும் அர்ச்சகர் அல்லாதவர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும், இசைக் கலைஞர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கும், அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அவர்களும் பாதிக்கப்பட்டவர்கள்தான். இதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

இந்துசமய அறநிலையத்துறை சார்பாக வழக்கறிஞர் வெங்கடேஷ் ஆஜராகி, இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். கோயில் பணியில் ஈடுபட்ட பூசாரிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கி விட்டது. மற்றவர்கள் அரசு ரேஷன் கடை மூலம் வழங்கும் உதவித் தொகையைப் பெற்றுள்ளார்கள். எனவே, மேலும் தனியாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், இதுவரை தமிழகத்தில் எந்தக் கோயில் திறந்திருக்கிறது? எந்தக் கோயில் மூடி உள்ளது? எனக் கேள்வி கேட்டனர். அதற்கு, அரசு வழக்கறிஞர், கிராமத்தில் உள்ள கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. மற்றவை மூடப்பட்டுள்ளன என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன? எத்தனை கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன? அதில் பூசாரிகள் எத்தனை பேர்? மற்ற ஊழியர்கள் எத்தனை பேர்? என்ற பட்டியலை இந்துசமய அறநிலையத்துறை வருகிற 22- ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் பட்டியலைப் பார்த்துதான், நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT