Skip to main content

கோயில் அறங்காவலர் பணியிடை நீக்க விவகாரம்; அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Temple trustee removal issue; High Court action order to charity department

கோவை மாவட்டம் மதுக்கரை தர்ம லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் வாழ்நாள் அறங்காவலராக பணியாற்றிய கிருஷ்ணசாமி என்பவரை நிர்வாக குறைபாடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இடை நீக்கம் செய்து கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜனவரி 3 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோவிலை நிறுவிய பரம்பரை அறங்காவலரான மறைந்த மந்தன நரசிம்ம ராஜு, கடந்த 1985 ஆம் ஆண்டு தன்னுடன் சேர்த்து ஐந்து வாழ்நாள் அறங்காவலர்களை நியமித்ததாகவும், கடந்த 40 ஆண்டுகளில் அறங்காவலர்களின் சொந்த நிதியில், கிணறு தோண்டி, குழாய் இணைப்புகள் கொடுத்து, மின் விளக்குகள் பொருத்தி, கோவிலை ஒட்டியுள்ள மலைக்கு செல்ல நடைபாதை அமைத்து, அன்னதான மண்டபம் அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, கோவிலின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1999 - 2022ம் ஆண்டுகளுக்கு இடையில் மற்ற நான்கு அறங்காவலர்கள் மரணமடைந்து விட்ட நிலையில், சமூகத்தில் நன்மதிப்பை பெற்ற, நான்கு பக்தர்களை அறங்காவலர்களாக நியமிக்கும்படி, கோவை மாவட்ட இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் கடிதம் அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இணை ஆணையரின் பரிந்துரையை ஏற்று, கோவிலுக்கு செயல் அலுவலரை நியமித்து அறநிலையத் துறை ஆணையர், 2023 அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என கிருஷ்ணசாமி தனது மனுவில் தெரிவித்துள்ளார். இருப்பினும், நான்கு வாழ்நாள் அறங்காவலர்களை நியமிக்கக் கோரிய தனது பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அப்போது இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து நடவடிக்கை துவங்கியுள்ளதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்ததை ஏற்று வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், தனக்கு வயதாகி விட்டதாலும், வாழ்நாள் அறங்காவலர்களை நியமிக்கும் வரை, கோவிலுக்கு மண்டபம் கட்டிக்கொடுத்தது போன்ற காரியங்களைச் செய்த கண்ணன் என்பவரை தற்காலிக அறங்காவலராக செயல்படும்படி கோரியதாகவும், அதை ஏற்று அவர் தற்காலிக அறங்காவலராக செயல்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சித்ரா பவுர்ணமி விழா குறித்து விவாதிக்க நடந்த கூட்டத்தில் மற்ற உறுப்பினர்கள், கோவில் வரவு செலவு விவரங்களைக் கேட்ட போது, கண்ணன் அவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியதால், அவரை பதவியில் இருந்து நீக்கியதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு பழிவாங்கும் வகையில், எந்த ஆதாரங்களும் இல்லாமல் கோவில் அறங்காவலர்களுக்கு எதிராக கண்ணன், அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தனக்கும், பிற அறங்காவலர்களுக்கும் எதிராக அறநிலையத் துறையில் புகார் அளித்த கண்ணன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான உத்தரவு பெற்றதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

கோவிலுக்கு நன்கொடை என்ற பெயரில் சட்டவிரோதமாக பணம் வசூலித்தும், கோவில் கணக்கு வழக்குகளை முறையாக கையாளவில்லை என்றும் கண்ணனுக்கு எதிராக அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் கோவிலை முறையாக நிர்வகிக்கவில்லை என கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில், அறநிலைய துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணைக்கு ஆஜராகி இந்த பொய் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கமளித்த போதும், தன்னை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆதாரங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்காமல் பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அப்துல்சலீம் ஆஜராகி,  இந்து சமய அறநிலையத்துறை முழுமையாக ஆராயாமல், கவனத்தை செலுத்தாமல் உத்தரவை பிறப்பித்துள்ளதாக குறிப்பிட்டார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் அருண்நடராஜன், அறங்காவலர்கள் இறந்ததை தெரிவிக்கவில்லை என்றும் நன்கொடை சீட்டுகள் அடித்ததில் அனுமதி பெறவில்லை என்றும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி மனுதாரருக்கு உரிய விளக்கத்தை இந்து சமய அறநிலையத்துறை தெரிவிக்க வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத் துறை அதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மனுதாரருக்கு எதிராக எந்த ஒரு பாதகமான நடவடிக்கைகளையும் நீதிமன்ற அனுமதியின்றி எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 28 ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது