Skip to main content

கோவில் பூட்டை உடைத்து திருட்டு; தர்மபுரியில் பரபரப்பு

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

Temple rock breaking and theft in Dharmapuri

 

தர்மபுரியில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு நடந்துள்ள திருட்டு சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. 

 

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஈட்டியம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை நேரத்தில் கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது கரும்பு தோட்டத்தில் உண்டியல் உடைக்கப்பட்டு சிதறி கிடந்ததை பார்த்து கிராம மக்களிடம் தகவல் கொடுத்துள்ளனர். 

 

Temple rock breaking and theft in Dharmapuri

 

தகவல் அறிந்த கிராம மக்கள் கோவிலுக்கு சென்று பார்க்கும் போது இரும்பு கேட்டில் பூட்டப்பட்டிருந்த பூட்டு மற்றும் நுழைவுவாயில் கதவில் போடப்பட்ட பூட்டு அறுக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. கோவில் திருட்டு சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அங்கு வந்த குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது கிராம மக்கள் தெரிவிக்கும்போது, கோவில் உண்டியலில் இருந்த சுமார் ரூபாய் 80,000 ரொக்கம் திருடப்பட்டுள்ளதாக தகவல் அளித்தனர்.

 

தடயவியல் துறையினர் பரிசோதனை செய்யும் வரை கிராம மக்கள் யாரும் உள்ளே நுழைய வேண்டாம் என காவல்துறையினர் தெரிவித்ததால் கிராம மக்கள் யாரும் கோவிலின் உள்ளே செல்லவில்லை. இதனால் லாக்கரில் வைக்கப்பட்ட 20 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் என்னவாயிற்று என கிராம மக்கள் குழப்பத்தில் உள்ளனர். தடயவியல் துறை வரவழைக்கப்பட்ட பின்பு உள்ளே என்னென்ன சேதம் ஏற்பட்டுள்ளது எனவும், காணாமல் போன பொருட்கள் குறித்து விவரங்கள் தெரியவரும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 24 இலட்சம் இருக்கும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.