Skip to main content

வயல்வெளியில் கேட்பாரற்று கிடந்த கோபுர கலசங்கள்..!

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

Temple property in farmer land
                                                  மாதிரி படம் 

 

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது வலசக்காடு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சிகுடியைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியன். இவர், நேற்று முன்தினம் (01.06.2021) மாலை 3 மணியளவில் தனது வயலுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது பெலாந்துறை வாய்க்கால் ஓரத்தில் ஒரு அடி உயரமுள்ள இரண்டு கோபுர கலசங்கள் கேட்பாரற்று கிடந்துள்ளன. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன், உடனடியாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் மூலம் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்துள்ளார். 

 

இதையடுத்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி சுந்தரம், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வினதா, சோழதரம் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலசம் கிடந்த இடத்திற்கு விரைந்து சென்று அவற்றைக் கைப்பற்றினார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், கைப்பற்றப்பட்ட அந்த கலசங்களை ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் முகம்மது உசேனிடம் இன்ஸ்பெக்டர் வினதா ஒப்படைத்துள்ளார். 

 

இரண்டு கலசங்களையும் வெவ்வேறு கோயில்களில் இருந்து திருடிய மர்ம நபர்கள் இங்குகொண்டு வந்து போட்டுள்ளனரா? அந்தக் கோபுர கலசங்கள் அந்த இடத்திற்கு எப்படி வந்தது? என்பவை குறித்தெல்லாம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோபுர கலசத்தில் இரிடியம் என்றொரு வேதிப்பொருள் இருப்பதாகவும் அந்த இரிடியம் கோடிக்கணக்கில் மதிப்புடையது என்றும் அப்படிப்பட்ட இரிடியம் உள்ள கோபுர கலசத்தைத் திருடி கொண்டுபோய்க் கொடுத்தால் கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் பல்வேறு கோயில்களில் அவ்வப்போது கோபுர கலசங்கள் திருடுபோவது நடந்துவந்தது. 

 

காலப்போக்கில் கோபுரக் கலசத்தில் அதுபோன்ற இரிடியம் என்ற வேதிப்பொருள் எதுவுமில்லை. அது கோடிக்கணக்கில், லட்சக்கணக்கில் எல்லாம் விலை போகாது என்பதை போலீசார் கண்டுபிடித்ததோடு, பல இடங்களில் கோபுரக் கலசத்தைத் திருடியவர்களைக் கைது செய்து சிறையிலும் அடைத்தனர். அதன் பிறகு கோபுர கலசங்கள் களவு போவது நின்றுபோனது. அந்தக் காலகட்டத்தில் ஏதாவது ஒரு கோவிலில் இந்தக் கோபுரக் கலசங்களைத் திருடி வந்தவர்கள், இதை யாரும் விலைக்கு வாங்க முன்வராததால் அந்தக் கலசங்களை வாய்க்கால் பகுதியில் போட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அப்பகுதியில் உள்ள சில சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமியிடம் பாலியல் மிரட்டல்: ஆந்திர மாநில வாலிபர் கைது

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
threat to girl: Andhra state youth arrested

சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியிடம் ஆன்லைன் மூலம் பழகி செல் போனில் இன்ஸ்டாகிராம் மூலம்  ஆபாசமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய ஆந்திர மாநில வாலிபரை சிதம்பரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மல்லானூர் ஊரைச் சேர்ந்த கேசவன் மகன் கிரன் குமார் (21) என்பவருக்கும் கடந்த இரண்டு வருடங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். மேலும் சிறுமியின் அங்கங்கள் குறித்த புகைப்படத்தை அவ்வாலிபர் பெற்றுள்ளார். இந்நிலையில் வாலிபர் கிரண்குமார் செல்போனில் இருக்கும் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் தாயார் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிதம்பரம் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பி.ரகுபதி உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மல்லானூருக்கு சென்று வாலிபர் கிரண்குமார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அழைத்து வந்தனர். இதுகுறித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தினர் வாலிபர் கிரண்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

கோவில் திருவிழாவில் இருதரப்பினர் மோதல்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Bilateral Clash at Temple Festival

கடலூரில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் சரகத்திற்கு உட்பட்ட நத்தம் கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில் திருவிழாவை நடத்துவதில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் மோதல் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். பின்னர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்தக் காவல்துறையினர் இரு தரப்பு மோதலையும் சமாதானப்படுத்த முயன்ற நிலைகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பை மீறி ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.

கோவில் திருவிழாவில் காவல்துறை முன்னிலையில் நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.