
திருச்செந்தூர் முருகன் கோவில் யானை மிதித்து யானைப் பாகன் மற்றும் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்செந்தூரில் கோவில் யானையாக உள்ள தெய்வானை யானைக்கு பக்தர் சிசுபாலன் என்பவர் பழம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென யானை, யானைப் பாகன் உதயா மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசி மிதித்தது. இதில் பாகன் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவிலுக்கு வந்திருந்த சிசுபாலன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் பல முயற்சிகள் எடுத்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திருச்செந்தூர் கோவில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து கோவில் யானையை கோவில் நிர்வாகம் கண்காணித்து வருகிறது. சிசுபாலன், பாகன் உதயகுமாரின் உறவினர் என்பதும் கோவிலுக்கு வந்திருந்த நிலையில் யானைக்கு பழம் கொடுக்க முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து யானையை வன அலுவலர்கள் சோதனை செய்தனர். பெண் யானைக்கு மதம் பிடிக்காது என்ற நிலையில் யானை ஏன் இவ்வாறு நடந்து கொண்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனத்துறை மருத்துவ அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். யானை கட்டி வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்பொழுது மொபைல் போனில் செல்ஃபி எடுக்க முயன்ற பொழுது யானை தாக்கியது தெரியவந்துள்ளது. பாகனின் உறவினர் சிசுபாலன் யானை தெய்வானை அருகே நீண்ட நேரம் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஆத்திரமடைந்து சிசுபாலனை யானை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியது தெரியவந்தது. அதேபோல் சிசுபாலனை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியதாக வன அலுவலர் கவின் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளார்.