Skip to main content

"அரசியலில் பெண்கள் சாதிப்பது சாதாரணமில்லை!" - மனம் திறந்த கவர்னர் டாக்டர் தமிழிசை! 

Published on 06/02/2021 | Edited on 07/02/2021

 

telangana state governor dr.Tamilisai Soundararajan speech at chennai


தெலுங்கானா ஆளுநராகப் பொறுப்பேற்று ஒன்றரை வருடம் முடிந்த நிலையில், தமிழக பத்திரிகையாளர்களையும், ஊடகவியலாளர்களையும் சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் சந்தித்து மனம் திறந்து பேசினார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். 

 

மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், இறுதியாகப் பேசிய டாக்டர் தமிழிசை, ‘’கவர்னராகப் பொறுப்பேற்றதுமே என் மீது ஒரு விமர்சனம் இருந்தது. குறிப்பாக, பா.ஜ.க.வை சேர்ந்த நான், பா.ஜ.க. அல்லாத அரசுடன் எப்படி ஒத்துப்போவேன் என்பதுதான். அது குறித்து பத்திரிகையாளர்களும் என்னிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு நான், அரசு நிர்வாகம் சரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பேன். நிர்வாகம் ஆரோக்கியமாக இருக்க ஒப்புக் கொள்ள வேண்டிய விசயங்களுக்கு ஒப்புக் கொள்வேன். தவறுகள் நடந்தால் அதனைச் சுட்டிக்காட்டுவேன். மக்கள் நலன் சார்ந்து, பிரச்சனையின் அடிப்படையில் எங்களின் உறவு ஆரோக்கியமாக இருக்கும் எனச் சொன்னேன். அப்படித்தான் இப்போது வரை எனது கவர்னர் பணி இருக்கிறது.
 

telangana state governor dr.Tamilisai Soundararajan speech at chennai


கரோனா பெருந்தொற்று காலத்தில் ராஜ்பவன், வெறும் கவர்னர் மாளிகையாக இல்லாமல், மக்கள் பவனாக இருந்தது. தினமும் ராஜ்பவனிலிருந்து உணவுகள் சமைக்கப்பட்டு மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. கரோனாவை எதிர்கொள்வது குறித்து ஒரு டாக்டராகவும் மக்களுக்கு எனது ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறேன். 

 

விமானப் பயணத்தில் ஒருமுறை ஒரு இளைஞர் என்னிடம் வந்து, "அக்கா, நான் ஒரு மீம்ஸ் கிரியேட்டர். உங்களைப் பற்றி நிறைய மீம்ஸ் போட்டிருக்கிறேன்" எனச் சொன்னபோது, "என்னுடைய உருவத்தையும், சுருட்டை முடியையும், கறுப்பு நிறத்தையும் கிண்டல் செய்கிற மாதிரி மீம்ஸ் போடுறீங்களே, சரியா? என்னைக் கிண்டல் செய்வதில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?" எனச் சிரித்துக் கொண்டே கேட்டேன், அதற்கு அவர், "உங்களைப் பற்றி மீம்ஸ் போட்டால்தான் லைக்ஸ் அள்ளுது அக்கா. அதன் மூலம் வருமானம் எனக்கு கிடைக்குது" என சொல்ல,"வருமானமெல்லாம் கெடைக்குதா?" என ஆச்சரியப்பட்டேன். 

 

விமானத்தை விட்டு இறங்குபோது, ஸாரி அக்கா, இனி உங்களை கிண்டல் பண்ற மாதிரி மீம்ஸ் போடமாட்டேன் எனச் சொன்னார். அப்போ நான், "என்னை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லை; உனக்கு வருமானம் வருது இல்லே! உன் மீம்ஸை கண்டினியூ பண்ணு" எனச் சொன்னேன். இது தான் நான். 

 

telangana state governor dr.Tamilisai Soundararajan speech at chennai


என் தலை முடி சுருட்டைதான். அதற்காக நான் வருத்தப்பட்டதில்லை. முடிதான் எனக்கு சுருட்டை; ஆனா, யாருடைய பணத்தையும் நான் சுருட்டியதில்லை. கறுப்பு நிறத்தை கொச்சைப் படுத்தியிருக்கிறார்கள். நான் கறுப்புதான்; ஆனா, என்னிடம் கறுப்பு பணம் கிடையாது. இங்கு பேசிய பத்திரிகையாளர்கள், செகண்ட் இன்னிங்சில் இங்கு வேறு பதவி காத்திருக்கிறது எனச் சொல்கிறார்கள். எனக்கு எதிலும் ஆசையில்லை. ஆண்டவனும், ஆள்பவர்களும் எனக்கு கொடுக்கிற பணியைச் செய்கிறேன். இன்றைக்கு எனக்கு என்ன பணி கொடுக்கப்படுகிறதோ அதை முழுமையாகச் செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்! எனது கடமை பணி செய்வது மட்டுமே! பலனை எதிர்பார்ப்பதில்லை. 

 

அறிஞர் அண்ணாவும் உருவத்தில் குள்ளம்தான். ஒருமுறை மேடையில் அவர் பேசும் போது உயரம் குறைவாக இருந்ததால், ஒரு தொண்டர் ஓடிவந்து சோடா பாட்டில் நிரம்பியிருந்த டப்பாக்களிலிருந்த பாட்டில்களை எடுத்து கீழேவைத்து விட்டு அந்த டாப்பாக்களை அடுக்கி வைத்திருக்கிறார். அதன் மீது ஏறி நின்று பேசிய அண்ணா, தொண்டனால் உயர்ந்திருக்கிறேன் என்றாராம். அதே போல தொண்டர்களால் உயர்ந்தவள் நான். 
 

telangana state governor dr.Tamilisai Soundararajan speech at chennai


அரசியலில் பெண்கள் வருவதும் அதில் சாதிப்பதும் அவ்வளவு எளிதானது இல்லை. என்னை மாநிலத் தலைவராக நியமித்த மறுநாளே, இவரை மூணு மாசத்துல மாத்திடுவாங்கன்னு சொன்னாங்க. மாத்திடுவாங்க; மாத்திடுவாங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆனா, பாஜக தலைவராக அதிக வருடங்கள் இருந்தது நான்தான். தலைவராக நான் இருக்கும் போது எதிர்கொண்ட பிரச்சனைகள் அதிகம். பல நாட்கள் இரவு முழுவதும் தூங்கியதே கிடையாது. அப்போதெல்லாம் எனக்கு ஆதரவாக இருந்தவர் எனது கணவர் டாக்டர் சௌந்தரராஜன் தான். 

 

தமிழக மக்கள் என் மீது எவ்வளவு அன்பும் பாசமுமாக இருக்கிறார்களோ அதேபோல தெலுங்கானா மக்களும் என்மீது அன்பாக இருக்கிறார்கள். உங்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் சந்திக்க ஆசைப்பட்டேன். அதுதான் இந்தச் சந்திப்பு!‘’ என்று மனம் திறந்து பேசினார் கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார். 

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.