Advertisment

மதுபோதையில் தகராறு; வாலிபரை வெட்டிக் கொன்ற நண்பர்கள்

A teenager passed away by his friends in thiruvallur

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (25). இவர் கடந்த 16ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு தனது நண்பர்களுடன் வெளியே செனறுள்ளார். வெளியே சென்ற அஜித் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த அஜித்தின் பெற்றோர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால், இது குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisment

இதற்கிடையே, ராமாரெட்டி பாளையம் கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் மீஞ்சூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், அந்த கிணற்றில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் பின்னர், பேரூராட்சி உதவியுடன் அந்த சடலத்தை மீட்டனர். அப்போது, அந்த சடலத்தின் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்துள்ளது.

Advertisment

அதனை தொடர்ந்து, அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், கிணற்றில் சடலமாக கிடந்தவர் காணாமல் போன அஜித் என்ற அதிர்ச்சி தகவல் காவல்துறையினருக்கு தெரிய வந்தது. மேலும், அவரது நண்பர்களான நாகராஜ் (21), வசந்தகுமார், மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், சம்பவ தினத்தன்று அஜித் தனது நண்பர்களான நாகராஜ், மோகன் (22), சாய் (22), கணேஷ் (25), வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதில் போதை தலைக்கேறிய அஜித் தனது நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள், அஜித்தை கத்தியை வைத்து சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர், அஜித்துடைய கை, கால்களை துணியால் கட்டி ஏரிக்கரையில் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நாகராஜ், வசந்தகுமார் மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் 3 நண்பர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thiruvallur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe